Sunday, December 28, 2008

தமிழ்ச் சிற்றிதழ்களுக்குக் கை கொடுங்கள்!

தமிழ்ச் சிற்றிதழ்களுக்குக் கை கொடுங்கள்!
இருபது - முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு இருந்த படிக்கும் ஆர்வம் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. இருப்பினும் நாளேடுகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. வணிக நோக்கோடு! சிற்றேடுகளும் நூற்றுக் கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வணிக ஏடுகள் விளம்பரங்களால் கொழுத்து வருகின்றன. அவற்றுக்கு அரசு விளம்பரங்களும் போய்ச் சேருகின்றன. காகை - மாலை நாளேடுகள் வணிக நோக்கோடு வெளிவருபவையே: அவற்றுக்குப் பணம் சம்பாதிப்பதே குறிக்கோள்! கொள்கைக்காக வரும் ஏடுகள் சிலவே! சிற்றேடுகள் என்பவை பெரும்பாலும் ஏதோ ஒரு கொள்கைக்காக வருபவையே! இவை மெழுகுவத்திபோல் தங்களையே உருக்கிக்கொண்டு சிந்தனை வெளிச்சத்தை வழங்குபவையே! இவைகள்தாம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுபவை!தந்தை பெரியாரின் குடிஅரசு, பேரிறிஞர் அண்ணாவின் திராவிடநாடு, கலைஞரின் முரசொலி போன்றவைதாம் அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியவை. இந்த இதழ்கள் இன்றும் பலரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை தமிழின எழுச்சியின் வரலாற்றுக் களஞ்சியங்களாகும். தமிழின முன்னேற்றத்துக்காக இன்றும் பல சிற்றிதழ்கள் குரல் கொடுத்து வருகின்றன. இவை வணிக இதழ்கள் அல்ல. இவை மாதந்தோறும் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணறிவருகின்றன. இவற்றிற்குத்தான் தமிழக அரசு ஆதரவுக் கரத்தைக் கொடுக்கவேண்டும்.இன்று தமிழகத்தில் 3000க்கு மேற்பட்ட அரசு நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்குச் சிற்றிதழ்களை வாங்கி ஆதரிக்கலாம். மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அரசு விளம்பரங்களை வழங்கியும் உதவலாம்.பின்வரும் வகையில் உதவலாம்:1. இருபது ஆண்டுகளுக்குமேல் வரும் இதழ்கள்; ஆர்.என்.அய். பதிவும், அஞ்சலகச் சலுகையும் பெற்ற இதழ்கள்.2. பத்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள்.3. அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்கள் எனப் பகுத்துக்கொண்டு இந்த ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் வெளிவரும் இதழ்களுக்கும், 2009ஆம் ஆண்டு அய்ந்து ஆண்டுகளுக்குமேல் வெளிவரும் இதழ்களுக்கும் அரசு உதவலாம்.ஒவ்வொரு மாவட்ட நூலகமும் 100 இதழ்களை பெற்று உதவலாம்.- முகம் மாமணி.-குறிப்பு: சிற்றிதழ் அன்பர்களே! மேற்கண்ட கோரிக்கைகள் தங்களுக்கானது; தங்களது சிற்றிதழ்களிலும் வெளியிட்டு உதவுக. கூட்டுக்குரல் கொடுத்தால் கலைஞர் அவர்கள் உடனே ஆவன செய்யக்கூடும்.(முகம், இதழ் - செப்டம்பர் - 2008)
நன்றி:கீற்று / சிந்தனையாளன் - அக்டோபர், 2008

Thursday, November 27, 2008

சிற்றிதழ் இயக்கம்:

சிற்றிதழ் இயக்கம்: நிகழ் என் அனுபவம், ஞானி
நான் தமிழ் இலக்கிய மாணவன் என்றாலும் எழுத்து காலத்திலிருந்தே தொடர்ந்து சிற்றிதழ்களோடு உறவுகொண்டிருந்தேன். செல்லப்பாவோடு நடத்திய உரையாடல்கள் மூலம் புதுக்கவிதை, இலக்கியம், திறனாய்வு குறித்த புதுப் பார்வைகளும் எனக்குள் இடம்பெறத் தொடங்கின. கசடதபற தொடங்கிப் படிகள், பிரக்ஞைவரையில் எல்லா இதழ்களையும் தொடர்ந்து வாசித்ததோடு கோவையில் இவை குறித்து இலக்கிய அரங்குகளில் நண்பர்கள்கூடி விவாதித்தோம். கசடதபற மூலம் நவீன ஓவியம், நவீன நாடகம் பற்றிய பார்வைகளையும் செரித்துக்கொண்டோம். இலக்கியம் என்ற தளம் கலாச்சாரம் முதலிய தளங்களோடும் நெருக்கமான உறவு கொண்டது. நவீன இலக்கியம் குறித்த விவாதங்கள் எங்கள் பார்வையை விரிவுபடுத்தின. க.நா.சு., கு.ப.ரா., மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, நகுலன், அசோகமித்திரன், பிரமிள், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றோரது எழுத்துக்களை மிகுந்த கவனத்தோடு படித்து விவாதித்தோம்.
புதிய தலைமுறை (1968-70) காலம் முதற்கொண்டே கட்சி மார்க்சியரோடு நாங்கள் முரண்பட்டதோடு மாவோவின் நெறியில் மார்க்சியத்தை வளமாகப் பயின்றோம். தோழர் எஸ். என். நாகராஜன் முன்வைத்த மார்க்சியம் எங்களுக்குள் ஆழமாகப் பதிந்தது. எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்கள் மார்க்சியம், திராவிட இயக்கம் ஆகியவற்றுக்கு எதிரான பார்வைகளையே கொண்டிருந்தன. கட்சி மார்க்சியரோடு கூர்மையாக முரண்பட்டபடியே தமிழ் இலக்கியம் மற்றும் நவீனத்துவப் பார்வைகளை நாங்கள் கற்றுக்கொண்டிருந்தோம். கசடதபற போன்ற இதழ்களில் இடம்பெற்ற மேற்கத்தியச் சார்பையும் நாங்கள் மறுத்தோம். ஞானக்கூத்தனின் எட்டு கவிதைகளில் உள்ளோட்டமாக இருக்கும் அந்நியமாதலை மார்க்சிய நண்பர்களும் கண்டுகொள்ளவில்லை. மார்க்சின் கையெழுத்துப் படிகளில் இடம்பெற்றிருந்த அந்நியமாதல் குறித்து எஸ். என். நாகராஜன் எங்களுக்கு ஏற்கெனவே கற்பித்திருந்தார்.
1970களின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் இலக்கிய வெளிவட்டம், படிகள் ஆகிய இதழ்களின் நண்பர்கள் எங்களுக்கு நெருக்கமாயினர். நடராசன், ராஜ்கௌதமன், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், தமிழவன், ஜி. கே. இராமசாமி ஆகியவர்களோடும் நிஜ நாடக இயக்கம் மு. இராமசாமி, திருச்சியில் திரைப்படச் சங்க நண்பர்கள் மற்றும் மதுரை, சென்னை முதலிய நகரங்களில் இருந்த நண்பர்கள் பலரும் கூடி இலக்கு என்னும் கலாச்சார இயக்கத்தைத் தோற்றுவித்தோம். குறைந்தது ஐந்தாண்டுகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற இலக்கு சந்திப்புகள் எங்கள் புரிதலை விரிவுபடுத்தின. சிற்றிதழ் இயக்கம் என்பது அடிப்படையில் வணிகக் கலாச்சாரத்திற்கு எதிராக, மக்கள் மத்தியில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிற இயக்கமாகத்தான் இருக்க முடியும். இந்த இயக்கம் இலக்கியத்தோடு மட்டும் உறவுகொண்டதாக இல்லாமல் நவீன ஓவியம், நவீன நாடகம், புதிய வகைத் திறனாய்வு முறை முதலியவை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். முதலாளியத் திற்குச் சேவைசெய்வதாக இந்த இயக்கம் இருக்க முடியாது என்பன போன்ற உணர்வுகள் எங்களுக்குள் உருவாகத் தொடங்கின.
புதிய தலைமுறை , வானம்படிகள் அடுத்து பரிமாணம் ஆகிய இதழ்கள், இயக்கங்களோடு உறவு கொண்டிருந்ததன் பின்னர் கோவையிலிருந்த நண்பர்கள் சிலரோடு இணைந்து 1983இல் நிகழ் இதழைத் தொடங்கினோம். ஏழுவரையிலான இதழ்களில் கூடுதலாக இலக்கியத்திற்கே இடமளித்தோம். தொடக்கத்தில் சுகுமாரன் ஆசிரியராக இருந்தார். அடுத்து நண்பர் க. ரத்தினம். கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றோடு திறனாய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றன. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில கவிதைகள் நாவல் குறித்துப் பல்வேறு இதழ் களில் வெளிவந்த மதிப்பீடுகளைத் தொகுத்து, இவற்றிற்கு எதிர்வினை என்ற முறையில் நிகழ் நண்பர்கள் விரிவான உரையாடலை நடத்தி, எங்கள் கருத்துரைகளைத் தொகுத்து வெளியிட்டதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வானம்பாடி இயக்கம் நின்றுவிட்ட நிலையில், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவர்களில் ஒருவரான நண்பர் அக்னிபுத்திரனின் உரையாடலை வெளியிட்டோம். தெரிகள் இதழுக்காக சுந்தர ராமசாமி, என்னிடம் கேட்டுப் பெற்றிருந்த டி. எஸ். எலியட்டின் இலக்கியக் கொள்கை என்ற எனது விரிவான கட்டுரை நிகழில் இடம் பெற்றது. சு.ரா. இக்கட்டுரையைத் திருப்பி அனுப்பியிருந்ததையும் இக்கட்டுரையின் தகுதி பற்றி நம்பிக்கையோடு சுகுமாரன் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தி வெளியிட்டதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
கன்னட மொழியிலிருந்து நண்பர் அரசு மொழிபெயர்த்த சிறந்த கவிதைகள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டோம். விமலாதித்த மாமல்லன், கோணங்கி ஆகியவர்களின் சிறுகதைகளும் நிகழில் வெளிவந்தன. 7ஆம் இதழோடு நிகழை நிறுத்தினோம். 16, 24 பக்கங்கள் என்ற அளவில் மட்டும் இதுவரையிலான நிகழ் இதழ்கள் அமைந்தன.
1988இல் கண்பார்வை பழுதுபட்டதும் பள்ளிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், இலக்கியத்தோடும் மார்க்சியத்தோடும் விரிந்த அளவில் நண்பர்கள், இலக்கியவாதிகளோடும் நான் அதுவரை கொண்டிருந்த உறவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலாத நிலையில் சில நண்பர்களின் ஒத்துழைப்போடு நிகழை மீண்டும் தொடங்கினேன். எண்பதுகளின் இறுதியில் உலக அளவில் அரசியல், பொருளியல் முதலிய எல்லாக் களங்களிலும் மாபெரும் அதிர்வுகள், மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத் தகர்வு. 1975இல் நெருக்கடி நிலையால் இந்திய அரசின் அணுகுமுறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இலக்கியவாதிகள் முதற்கொண்டு இனி எவரும் பழைய உலகத்தோடு வாழ முடியாது என்றானது. உலக அளவிலான அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு அவற்றிற்கு எதிர் வினையாற்றுவது அவசியமானதாக மாறியது. தமிழகத்தில் நிறப்பிரிகை முதலிய இதழ்கள் முற்றிலும் நவீனமான பார்வையை முன்வைத்துச் செயல்பட்டன. அமைப்பியல் போன்ற புதிய அணுகுமுறைகள் தமிழ் இலக்கிய உலகில் எதிரும் புதிருமான ஆய்வுகள் மற்றும் விமர்சனங்களைத் தோற்றுவித்தன. எம். டி. முத்துக்குமாரசுவாமி, நாகார்ஜுனன் தொடங்கி, வேறு சிலரும் அமைப்பியல், மொழியியல், நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் பெருமளவில் பேசத் தொடங்கினர். இத்தகைய சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் முறையில் நிகழ் செயல்பட்டது. 88இல் தொடங்கி 96வரை 25 இதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு நான் வெளியிட்டேன். 48, 52, 64, 80,1 00 எனப் பக்கங்கள் கூடிக்கொண்டிருந்தன. நூல் மதிப்புரைகளை நிறைய வெளியிட்டோம். அவ்வப்போது சிறுகதைகளும் நிகழில் இடம்பெற்றன. புதிய நண்பர்கள் பலர் நிகழில் எழுதினர்.
நிகழின் முக்கியப் பணிகள் சிலவற்றை இங்கே சுருக்கமாகவேனும் நான் பதிவுசெய்ய வேண்டும். முதன்மையாக சோவியத் ஒன்றியத்தில் தொடங்கிய சோசலிசத் தகர்வுக்கு எங்கள் எதிர்வினைகள் என்னவாக இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். உலகில் இனி மார்க்சியத்திற்கு வாழ்வில்லை. சோசலிசம் பொய்யாய், பழங்கனவாய்ப் போய்விட்டது. இனி சோசலிசத்தைப் புதுப்பிக்க முடியாது. இத்தகைய கருத்துகளை முதலாளியர் மட்டும்தான் தீவிரமாகப் பரப்பினர் என்பதில்லை. மார்க்சியர் என்று தம்மை நம்பிக்கொண்டிருந்த கட்சி சார்ந்தவர்க்குள்ளும் இத்தகைய அவநம்பிக்கைகள் எழுந்தன. 1965 முதல் எங்களை நெறிப்படுத்திய தோழர் எஸ். என். நாகராஜன் அவர்களைப் பொறுத்தவரை நாம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து இருந்ததுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. மார்க்சியம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கின்றன என்று உறுதியாகப் பேசினார். இம்முறையில் எஸ். என். நாகராஜன் முன்வைத்த ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை நிகழ் தொடர்ந்து வெளியிட்டது. இப்பார்வையை ஒத்த நண்பர்கள் சிலரும் தொடர்ந்து எழுதினர்.
உற்பத்திச் சக்திகளுக்கு முதன்மை தருகிற மேற்கத்திய மார்க்சியத்தை ஆணியம் என்றும் உற்பத்தி உறவுகளுக்கு முதன்மை தருகிற கீழை மார்க்சியத்தைப் பெண்ணியம் என்றும் நாகராஜன் பெயரிடுகிறார். இதிலிருந்து மார்க்சியத்தின் உட்கூறுகளான சூழலியம், பெண்ணியம், தலித்தியம் முதலான விளக்கங்களை நாம் பெற முடியும். சூழலியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல்களில் நிகழ் ஆர்வத்தோடு பலரிடமிருந்தும் கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டது. உலகளவில் மேற்கத்தியரின் ஆதிக்கம் தொடக்கத்தில் டங்கல் திட்டம் பிறகு பொது வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உலக வணிக நிறுவனம் என்ற பெயர்களில் முன் வைக்கப்படுகிற மேற்குலகின் அரசியல், மற்றும் பொருளியல் ஆதிக்கம் குறித்த கட்டுரைகளை நிகழ் பெருமளவில் வெளியிட்டது. இரவி சீனிவாஸ் எழுதிய கட்டுரைகள் இம்முறையில் குறிப்பிடத்தக்கவை. பசுமைப் புரட்சி என்ற பெயரில் உழவர்களின் வாழ்வையும் நிலங்கள், நீர்நிலைகள் முதலியவற்றையும் நாசமாக்கும் போக்குக்கெதிராக இயற்கை வேளாண்மை குறித்த கட்டுரைகள் நிகழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்று இந்திய அளவில் பேசப்படுகிற அறிஞர் நம்மாழ்வாரின் கட்டுரைகளை நிகழ்தான் முதலில் வெளியிட்டது. சோவியத் ஒன்றியம் தகர்ந்த நிலையில் கியூபா தனக்கான வேளாண்மை முறை இயற்கை வேளாண்மையாகத்தான் இருக்கும் என்பதைக் கண்டுகொண்டதைக் குறித்தும் நிகழில் கட்டுரைகள் வெளியாகின.
நிகழின் கருத்தியல் வளமான மார்க்சியம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் பல துறை சார்ந்த கட்டுரைகள் நிகழில் தொடர்ந்து வெளியாயின. கட்சி மார்க்சியரைப் பொறுத்தவரை உளவியல் அறிஞர் பிராய்டைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கும் நிலையில் எரிக் ப்ராம், மாஸ்லோ, விக்டர் ப்ராங்கள் முதலியவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. பிராய்டையும் மார்க்ஸையும் இணைத்துப் பார்க்கும் மனிதநேய உளவியலாளர் எரிக் ப்ராமைப் பின்பற்றி நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களுக்குள் ஆதிக்கம் எவ்வாறு உள்ளிருந்து செயல்படுகிறது என்பது குறித்து இரவி சீனிவாஸ§ம் பூரணச் சந்திரனும் விரிவாக எழுதினார்கள். நவீன கால இயற்பியலும் இந்திய ஆன்மிகமும் இணைய முடியும் என்ற முறையில் ப்ரிட்ஜ் ஆப் காப்ரா எழுதியதை மேற்கோள்காட்டி சுஜாதா எழுதினார். விஞ்ஞானமும் விபூதிப் பட்டையும் என்று பெயரிட்டு சுஜாதாவைச் சாடி பிரமிள் எழுதினார். ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் குறித்து ஆழமான முறையில் விமர்சித்து ஜீவ ஒளி எழுதினார். ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி முதலிய துறைகளில் நிகழ்ந்த மாபெரும் சாதனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிஞர் தரம்பாலும் வேறு சிலரும் நூல்கள் வெளியிட்டுள்ளனர். தரம்பாலின் ஆய்வுகளைத் தொகுத்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் கட்டுரை எழுதினார். இந்தியாவின் அரசியல், பொருளியல், வரலாறு, முதலிய அனைத்தினுள்ளும் இந்துத்துவம் எவ்வாறு செயல்பட்டது, செயல்படுகிறது என்று இந்து, இந்தி, இந்தியா என்று எஸ். வி. ராஜதுரை எழுதிய நூலை விமர்சித்து ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் எழுதினார். நிகழ் அவருக்கு அரியணையிட்டு ராஜ மரியாதைசெய்தது என்று தலைப்பிட்டு எஸ். வி. ஆர் மறுப்புரை தந்தார்.
காந்தியாரின் சத்தியாகிரகம் என்ற போர்முறையை கிராம்சி மறுத்தார் என்றும் ஏற்றுக்கொண்டார் என்றும் விவாதக் கட்டுரைகள் நிகழில் வந்தன. மேற்கத்திய மார்க்சியம் குறித்து இதைப் போலவே மாறுபட்ட மதிப்பீடுகளைத் தரும் கட்டுரைகளும் இடம்பெற்றன. ஜெரோமி ரிப்சின்சி என்பவரின் அர்ஜென் என்ற உலகளவில் புகழ் பெற்ற நூல் குறித்து, சிங்கராயர் விரிவாக எழுதினார். டார்வினின் வாழ்க்கை ஒருவகையில் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கை. இர்விங் ஸ்டோன் எழுதிய நூலை அழகிய நடையில் சிங்கராயர் தமிழில் தந்தார். இவ்வகையான கட்டுரைகளை மரபான, வைதீக மார்க்சியர் கண்டுகொள்ளவேமாட்டார்கள். மார்க்சியம் தன்னளவில் முற்ற முடிந்த ஒரே மெய்யியல் என்றுதான் இவர்கள் உரத்துப் பேசுவார்கள். மார்க்சியம் தன்னளவில் விரிந்துகொடுத்து உலகளவில் வளர்ந்துவரும் அறிவுத் துறை முதலியவற்றின் ஆக்கங்களைத் தனக்குள் செரித்துக்கொள்ள முடியும் என்னும் நோக்கத் தோடுதான், பூகோ, ஐவான் எலிச் முதலியவர்கள் பற்றிய கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. உலகளவிலான தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரைகளும் இந்நோக்கில்தான் வெளியிடப்பட்டன. டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, டி. எஸ். எலியட், கிரகாம்கிரின், சால்பெல்லோ முதலியவர்கள் குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றன.
ஏசுநாதரைப் புரட்சியாளர் எனச் சில விடுதலை இறையியலாளர்கள் காண்கின்றனர். இந்தியாவிலும் இக்குரல் எழுகிறது என்ற முறையில் நிகழ் சில கட்டுரைகளை வெளியிட்டது. கிறிஸ்துவத்திற்குள் இந்தியாவில் இவ்வகையில் முதல் குரலை எழுப்பியவர் காப்பன் பாதிரியார். இவரது கருத்துகளைச் சா. தா. செல்வராசு தொகுத்து எழுதினார். விடுதலை இறையியல் குறித்து இன்னொரு கட்டுரை தந்தவர் அருள்திரு அல் போன்சு. விடுதலை இறையியலுக்குள் மக்களுக்கான இறையியல் குரல் இல்லை என்று மறுத்து டேவிட் சித்தையா எழுதினார். இவருக்கு அல்போன்சு பதில் தந்தார்.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படுகின்ற மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத். இவரது உலகாயுதம் என்ற புகழ்பெற்ற நூலின் ஒரு முக்கியமான ஒரு கட்டுரையைச் சிங்கராயர் தொகுத்துத் தந்தார். ஜெயமோகன், தேவி பிரசாத்தின் பொருள் முதல்வாத எல்லைகள் குறித்து எழுதினார். இந்திய மெய்யியல் குறித்துக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய விரிவான கட்டுரையும் நிகழில் இடம்பெற்றது.
போலந்தில், சீனாவில், 90களிலும் மார்க்சியம் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினையைச் சந்திக்கிறது என்பது குறித்த கட்டுரைகள் வெளியாயின. ஹங்கேரி பற்றி யமுனா ராஜேந்திரன், போலந்தில் தன் அனுபவம் குறித்து இந்திரா பார்த்தசாரதி, சீனாவில் மார்க்சியம் இனி என்னவாக இருக்கும் என்பது பற்றி சச்சிதானந்தம், ரஷ்யாவில் தான் கண்டது என்ன என்பது பற்றி ஜீவானந்தம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் வெளிவந்தன.
1968இல் வசந்தத்தின் இடி முழக்கம் என இந்தியாவில் வெடித்த நக்சல் பாரி இயக்கம் கேரளாவில் ஏன் தோற்றது என்பது பற்றிய தீவிரமான அக்கறையோடு பாஷா போஷினி என்ற மலையாள இதழில் மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 5 முக்கியமான கட்டுரைகளைத் தமிழில் தந்தார் இளைஞர் மனோகரன். தமிழகத்திலும் நக்சல்பாரி இயக்கம் அரசின் கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகிச் சிதைந்தது. இது பற்றிய கட்டுரைகளை எவ்வளவு முயன்றாலும் பெற முடியவில்லை.
இனி, நிகழின் இலக்கியப் பார்வை குறித்து: தலித்தியம் பற்றிய விவாதங்களை நிகழ் ஊக்குவித்தது. தலித்தியம், பெண்ணியம் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை நிகழ் வெளியிட்டது. திராவிட இயக்கத்தின் பார்வை, எல்லைகள் குறித்துக் கட்டுரைகள் வெளிவந்தன. அரசு, அதிகாரம், முதலாளியம் ஆகியவற்றுக்கு இடம் தரும்போது எவ்வகை இயக்கமும் தத்துவமும் தமக்குள் சிதைவடையும். கட்சி மார்க்சியத்திற்கு மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்திற்கும் நேர்ந்திருப்பது இதுதான் என்பதை இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டின. பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளும் நிகழில் இடம்பெற்றன. முத்துக் குமாரசுவாமி, நாகார்ஜுனன், நோயல் இருதயராஜ் முதலியோர் எழுதினர்.
நிகழில் வெளிவந்த கவிதை, சிறுகதைகள் முதலிய படைப்புகள் குறித்து இங்கே தொகுத்துச் சொல்லலாம். காலச்சுவடு இதழால் மறுக்கப்பட்ட ஜெயமோகனின் 'படுகை' சிறுகதை நிகழில்தான் வெளிவந்தது (கேரளாவில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபொழுது ஆதிவாசிகளின் அவலம் குறித்து ஜெயமோகன் எழுதிய அருமையான கதை இது. அணைக்கட்டு முதலிய அறிவியல் ஆக்கங்களை மறுக்கக் கூடாது என்பது சு. ராவின் பார்வையாக இருந்தி ருக்கலாம். அணைக்கட்டு முதலிய நவீன ஆக்கங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் குறித்தது ஜெய மோகனின் பார்வை. இதில் எனக்கும் உடன்பாடு. நிகழில் இக்கதை வெளியானதை ஜெயமோகன் குறிப்பிட்டபொழுது ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சு. ரா கூறினாராம். ஞானிக்கு இலக்கியம் தெரியாது, ஜெயமோகனுக்கும் தெரியாது. சு. ராவுக்கு மட்டுமே தெரியும்.) ஜெயமோகனின் போதி என்ற சிறுகதையும் நிகழில் வெளியாயிற்று. ஒரிசாவில் ஏவுகணை ஆய்வுக்கான தளங்களுக்காக மக்களிடமிருந்து நிலம் அபகரிக்கப்பட்டபோது மக்கள் போராடினர். இந்தப் போராட்டம் குறித்து, கே. சி. லட்சுமி நாராயணன் மலையாளத்தில் எழுதிய கட்டுரையைத் தமிழில் ஜெயமோகன் நிகழுக்குத் தந்தார். இந்தியாவின் நீதி சாஸ்திரம் பற்றிய ஆனந்தின் ஆய்வையும் இதழுக்குத் தந்தார். இம்முறையில் ஜெயமோகன் நிகழுக்குப் பெரிதும் ஒத்துழைத்தார்.
நிகழில் ஜெயமோகன் தவிர காவேரி, தேவிபாரதி, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன் முதலியவர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட்டன. தருமராஜ் மிகச் சிறந்த தலித் சிறுகதை ஒன்றை எழுதினார். ஜெயமோகன் தவிர தேவதேவன், மனுஷ்ய புத்திரன், பாப்லோ அறிவுக்குயில், அண்ணாத்துரை கரிகாலன், அறிவன், எஸ்தர், எட்வர்டு என்று தொடங்கி ஒரு நூறு கவிஞர்களின் 300 கவிதைகளையாவது நிகழ் வெளியிட்டிருக்கும். நூல் மதிப்புரைக்கெனப் புதிய நூல்களை அனுப்பிய பெரும் பாலானவர்களின் நூல்களுக்குச் சிறப்பான மதிப்புரைகள் எழுதப்பட்டன. 250 நூல்களுக்கு இவ்வாறு மதிப்புரைகள் எழுதப்பட்டன. சிட்டி, அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, பிரமிள் முதலிய மூத்த தமிழறிஞர்களும் நிகழில் எழுதினர். எஸ்.என். நாகராஜனின் மார்க்சியம் கிழக்கும் மேற்கும் என்னும் நூல் குறித்து விரிவான விவாதங்கள் வெளியிடப்பட்டன. நாகராஜனின் நெறிப்படுத்தலோடு மக்கள் அறிவியக்கம் என்ற அமைப்பினைக் கோவை மற்றும் மதுரைத் தோழர்கள் இணைந்து உருவாக்கினோம். மக்கள் அறிவியல் என்ற புதிய பார்வையோடு கூடிய கட்டுரையை துரை மடங்கன் எழுதினார்.
நிகழோடு ஒத்துழைத்த நண்பர்கள் குறித்துச் சுருக்கமாகவேனும் சொல்ல வேண்டும். அறிவன், தாமரை ஆறுமுகம், அன்பு வசந்த குமார், கணகுறிஞ்சி ரத்தினம், பொன். சந்திரன், க. பூரணச்சந்திரன், சிங்கராயர், இரவி சீனிவாஸ், ஜீவ ஒளி, ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் இப்படி இன்னும் சிலரையேனும் குறிப்பிட வேண்டும். 96இல் நிகழை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருள் வசதிக் குறைவு என்பது ஒரு முக்கியமான காரணம். எனினும், நினைத்துப் பார்க்கிறபோது, நிகழின் சாதனை தமிழகச் சூழலில் மிக முக்கியமானது எனத் தோன்றுகிறது. எந்த ஒரு சூழலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் கருத்தியல்கள் இல்லாமல், தனி இயக்கமென எதையும் செய்ய முடியாது. வெங்கட் சாமிநாதன், பிரமிள், சுந்தர ராமசாமி, எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், அ. மார்க்ஸ், எம். டி. முத்துக்குமார சுவாமி இவர்கள் ஒவ்வொருவரும் தமிழகச் சூழல்களில் தமக்கான கருத்தியலோடு, இயக்கத்தோடு தீவிரமாகச் செயல்பட்டவர்கள். இவர்களோடுதான் எஸ்.என். நாகராஜனையும் என்னையும் சேர்த்துக்கொள்கிறேன். இவர்களும் தமிழகச் சூழலை நிறைத்தவர்கள் அல்ல. இவர்களோடு க. நா. சு., முத்துசாமி, செல்லப்பா, அசோகமித்திரன், மு. இராமசாமி என எத்தனையோ பேரைச் சொல்ல முடியும். இவர்களுக்குள்ளும் பின்நிலையிலும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளும் பல கலை, இலக்கியம் நாடகம், ஓவியம், வேளாண்மை என்றும் பல இயக்கங்கள், அரசியல் சூழல், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய இந்தியா மற்றும் உலகச் சூழல்.
நிகழில் வெளிவந்த கட்டுரைகளை வகைப்படுத்தி, தொகுத்து இதுவரை கீழ்வரும் 5 நூல்கள் வெளியிட்டேன். 1. இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம், 2. அறிவியல், அதிகாரம், ஆன்மீகம், 3. மார்க்சியம்:தேடலும் திறனாய்வும், 4. படைப்பியல்: சில சிகரங்களும் வழித் தடங்களும், 5. நிகழ் மதிப்புரைகள் 100. நிகழ் உண்மையில் தமிழகத்தில் ஒரு மாபெரும் கலாச்சார இயக்கத்தில் ஒரு பகுதியாக இருந்து தீவிரமாகவும் உண்மையாகவும் செயல்பட்டது. வளமான மார்க்சியத்தைக் காப்பாற் றியது நிகழின் ஒரு சாதனை. எஸ். என். நாகராஜன் தமிழகச் சூழலில் தீவிரமாகச் செயல்பட நிகழ் ஒரு கருவியாக இருந்தது. நாகராஜனோடு ஒத்துழைத்த நண்பர்கள் மரியாதைக்குரியவர்கள். இவர்கள் மத்தியில் என் வாழ்வுக்கும் நிறைவு ஏற்பட்டது.
இக்கட்டுரை பக்க அளவைக் கருதி சுருக்கப்பட்டுள்ளது.

நன்றி : காலச்சுவடு

அநங்கம்

அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
“அநங்கம்” மலேசிய தீவிர எழுத்தாளர்களையும் வாசகர்களையும் விமர்சகர்களையும் இணைப்பது
ஆசிரியர் : கே.பாலமுருகன் Balamurugan102@gmail.com , bala_barathi@hotmail.com
துணை ஆசிரியர் : ஏ.தேவராஜன்
ஆசிரியர் குழு
ப.மணிஜெகதீஸ்
கோ.புண்ணியவான்
செ.நவீன்
மோ.கவிதா
அநங்கம் இரண்டாவது இதழ் மீண்டும் மலர்ந்துள்ளது. அச்சு வடிவமைப்புலும் பக்க மேம்பாட்டிலும் மேலும் நிறையவே வலுவடைய வேண்டிய சூழலில் அநங்கம் இருந்தாலும், சிறு பத்திரிக்கை நடத்துவதில் அதிகமான இலாப நோக்கங்களைப் பெற இயலாத நிலையைச் சரிகட்ட அநங்கம் வழக்கம் போலவே சாதாரண அச்சு அமைப்பில் மலர்ந்துள்ளது. இருந்தபோதும் மலேசிய எழுத்தாளர்களும் சிங்கப்பூர் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளைக் கொடுத்து ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் படைப்புகள் நமது அநங்கம் சிற்றிதழின் நோக்கத்தை நிறைவாக்கும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்குண்டு.
அநங்கம் இதழின் நோக்கங்கள் குறித்து கொஞ்சம் விளக்கமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அநங்கம் இதழ் மலேசிய தீவிர எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், வாசகர்களையும் இணைப்பதோடு, மேலும் வெளிநாட்டுப் படைப்பாளர்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நல்ல இலக்கியப் படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதே ஆகும். தொடர்ந்து வளரும் இளம் படைப்பாளர்களையும் நாட்டின் மூத்த எழுத்தாளர்களையும் படைப்புலகத்தில் இணைக்க வேண்டும் என்பதே இதழின் பிரதான நோக்கமும்கூட.
அந்த வகையில் அநங்கம் இதழ் தொடர்ந்து குறிபிட்ட கால வரையறை இல்லாமல் வெளிவந்து கொண்டே இருக்கும். வாசகர்கள்-எழுத்தாளர்களின் ஆதரவில் அநங்கம் இதழ் தனிச் சுற்றுக்கும் மட்டுமே. எந்த வியாபார நோக்கத்திற்காகவும் இலாபத்திற்காகவும் வெளியீடப்படவில்லை என்பதை அன்பான வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அநங்கம் இதழ் எந்தக் கடைகளிலும் விற்பனைக்குத் தரப்படாது. நண்பர்கள் வட்டம் மூலமே அநங்கம் இதழ் கொண்டு செல்லப்படும்.
தொடர்புக்கு:
கே.பாலமுருகன், இதழாசிரியர், bala_barathi@hotmail.com

நன்றி : திண்ணை (www.thinnai.com)

தாய்மண்

தாய்மண்
'சாகும் போதும் தமிழ் பாடிச்சாக வேண்டும்
என் சந்ததியும் அவ்வாறே சாகவேண்டும்"

- எனத் தமிழ் பற்றுடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'தாய்மண்' மாத இதழ். ஆசிரியர். கவிப்பேரரசு அருமையார். 1981 ஆம் வருடம் இவருடைய பிறந்த நாளான நவ.7 அன்று தாய்மண் மாத இதழும் தாய்மண் இலக்கிய கழகமும் தொடங்கப்பட்டன. தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக வெளிவந்து கொன்டிருக்கும் இவ்விதழில் மரபுக் கவிதை, இலக்கியக் கட்டுரைகள், கலை தொடர்பான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

துருவன் , பா, எழிழரசு, பாவேகோ உட்பட பலர் எழுதிவருகின்றனர்.சãகப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்படும் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகிறது..சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகளும் வெளிவருகிறன. அந்தந்த மாதத்தின் முக்கிய செய்திகளை மையமிட்டு எழுதப்படும் 'கவிப்பேரரசு கடிதம்' பகுதி தொடர்ந்து வெளியாகிவருகிறது.

தாய்மண் இதழைக் காட்டிலும் தாய்மண் இலக்கியக் கழகல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதன் கிளைகள் தமிழகத்தின் பலபகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.மாதந்தோறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதுவரை 1116 கூட்டங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் அருமையார்.மக்களால் போற்றப்படும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள்,கவிஞர், அரசியல் தலைவர் போன்றோருக்கு விழா எடுத்தல் குறிப்பாக, பாரதி, பாரதிதாசன்,இளங்கோ, தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கார்,பேரறிஞர் அண்ணா,காந்தியடிகள், வ.வு.சி. போன்றோருக்கு விழா எடுத்து சிறப்பித்து வருகிறது தாய்மண் இலக்கியக் கழகம். அத்துடன் மாணவமாணவிகளுக்கும் ,இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் அளித்து வருகிறது.தாய்மண் இலக்கியக் கழகம் ஒரு குடும்ப அமைப்பாக செயல் பட்டு வருகிறது.புகை பிடிக்காத , மது அருந்தாத, பிற எந்த தீய பழக்கங்களுமில்லாதவர்களே உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.குறிப்பாக வேலைக்குச் செல்லாதவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதில்லை. சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பற்றுள்ளவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமீபத்தில் முத்தமிழ் இலக்கிய 4 வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தியது தாய்மண் இலக்கியக் கழகம். இதில் நீதியரசர் பெ. வேணுகோபால் உட்பட பலர் விருந்தளித்து சிறப்பிக்கப்பட்டனர்.இதுபோல், பாரதியார், பாவேந்தர், கண்ணதாசன், சிவாஜி, மா,பொ.சி, டி.கே.சி ஓளவை பெயர்களிø இதுவ¨Ã 2500க்கும் மேற்பட்ட விருதுகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.இவ்வாண்டு (2005) அருமையார் பெயரிலும், நீதியரசர் பெ.வேணுகோபால் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பற்றி:
79 வயதாகும் கவிப்பேரரசு அருமையார் இப்போதும் எழுத்து, பத்திரிகை, மாநாடு என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் பேசின்பாலம் மின்வாரியத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.1953 - 54ல் திருத்தணி மீட்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றவர்.டி.கே.எஸ் நாடகக் குழுவிலும் நடித்திருக்கிறார். தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர்.கவிதை, பயண நூல், சிறுகதை, இலக்கிய ஆராய்ச்சி அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகள் என 17 நூல்கள் எழுதியுள்ளார்.

தி.க.சி., வல்லிக்கண்ணனைப் போல கடிதம் எழுதுவதில் சளைக்காதவர் இவர்.இதுவரை நñபர்களுக்கும் , இலக்கிய ஆர்வலர்களுக்கும் 2,19,843 கடிதங்கள் எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றி அந்நாட்டு இலக்கிய அமைப்பு¸ளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
'கவிப்பேரரசு', 'இனமானக் கவிஞர்' உள்ளிட்ட மொத்தம் 60 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

" தமிழ்மொழி ஆட்சிமொழி, பயிற்று மொழியாகவும்,எங்கும் எதிலும் தமிழாகவே இருக்கவும், தமிழ் படித்தவர்கள் அரசுப் பணிகÇ¢லும் , தனியார் பணிகளிலும் வேலைபெறவும் பாடுபடுவது தாய்மண்ணின் தாய்மண்ணின் இலக்கியக் கழகத்தின் குறிக்கோளாகும்" என்கிறார் அருமையார்.

சிற்றிதழ் சந்தா விபரம்:
தனி இதழ் - ரூ 5/-
ஆண்டு சந்தா- ரூ 60/-

முகவரி:
தாய்மண்
32,சோமசுந்தர விநாயகர் கோயில்
2 வது தெரு,
பெரம்பூர்
சென்னை – 11

நன்றி : அந்திமழை ( http://www.andhimazhai.com)

Sunday, July 27, 2008

அந்திமழை

அந்திமழை (www.anthimazhai.com)
இத்தளத்தில் வாரம் ஒரு சிற்றிதழை அறிமுகப் படுத்துவதாக அறிவித்து இதுவரை பல இதழ்களையும் அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.

அவற்றில் ஒரு சில இதழ்களின் பெயர்கள்:
கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை
மண்மொழி
தச்சன்
அதிர்வு
குழலோசை
தமிழ் நேயம்
யாதும் ஊரேமது
மலர்
தலித்முரசு
மீண்டும் கவிக்கொண்டல்
அநிச்ச
தமிழ் பணி
வல்லினம்
நறுமுகை
சோலைக்குயில்
கணையாழி
அணி
கிழக்குவாசல்
அணங்கு
தாமரை
கனவு
மெய்யறிவு
இனிய நந்தவனம்
அம்ருதா
பெண்ணியம்
சௌந்தரசுகன்

தமிழம் வலை

தமிழம் வலை (www.thamizham.net)
சிற்றிதழ் ஆர்வலரும், தமிழறிஞரும், தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வருபவருமான தோழர்.பொள்ளாச்சி நசன் அவர்களால் நடத்தப் பெறும் தளமாகும்.

இதில் தனக்கு வரும் சிற்றிதழ்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களையும், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையும் வழங்கி வருவதோடு வேறு பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது. படித்துப் பயன் பெறுக.

நன்றி

Saturday, July 26, 2008

கீற்று - சிற்றிதழ்களுக்காண இணையம்

கீற்று
www.keetru.com
தமிழ் சிற்றிதழ்கள் பலவற்றையும் தொகுத்து பெரும் சிரமங்களுக்குமிடையிலும் தொடர்ந்து வெளிவருகிறது. இவ்விணையத்தில்
விசை, தலித் முரசு, புதிய காற்று, கூட்டாஞ்சோறு, சமூக விழிப்புணர்வு, பெரியார் முழக்கம், அநிச்ச, செய்திமடல், தாகம், தீம்தரிகட, உங்கள் நூலகம், கவிதாசரண், அணங்கு, கதை சொல்லி, குதிரைவீரன் பயணம், அணி, புது எழுத்து, பெண்ணியம், இளைஞர் முழக்கம், Workers Unity என்ற வங்கி ஊழியர் திங்களிதழ், கருஞ்சட்டைத் தமிழர், புன்னகை, புதிய தென்றல், வனம், விழி, கனவு, இன்மை, சஞ்சாரம், தமிழர் கண்ணோட்டம், செய்தல் உள்ளிட்ட இதழ்கள்
தொடர்ந்து வெளிவருகின்றன.

சிற்றிதழகள் தவிர்த்து கட்டுரைகளும், கவிதைகளும், மருத்துவச்செய்திகள் நேர்காணல்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

அனைவரும் படித்து ப்யனுறுவதோடு தங்களால் இயன்ற உதவியையும் நல்கிட வேண்டும்.

நன்றி, வணக்கம்.

Friday, July 25, 2008

முங்காரி, மகாகவி

வாசிக்க வாருங்கள்
தமிழ் வாசிப்பில் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்துக்கு மாற்றான புதிய சிந்தனைகளையும் கலகக் குரல்களையும் காண முடிகிற ஒரு களம் சிற்றிதழ்களின் உலகம். ஆனாலும் ஒரு அடையாளம் போல மூட்டு வரை நீண்ட ஜிப்பாவும் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையும் குறுந்தாடியுமாக இருந்தால் தான் கவிஞன், சிறு பத்திரிகையாளன், சிந்தனையாளன் என்று பொதுஜனங்கள் மத்தியில் இருந்த கேலிக் குரல்கள் குறித்து எந்தக் கவலையும் இன்றி கலகம் என்பதே இலக்கியம் என்பதாக ஒரு கட்டத்தில் இலக்கியச்சூழல் இருந்தது. அதன் காரணமும் தெளிவானது. வெகுஜன இதழ்களால் கட்டமைக்கப் பட்ட ஒழுங்கமைவுகளை மீறுதல் என்பதே இலக்கியச் சிறுபத்திரிகைகளின் நோக்கமாக இருந்தது. அதே சமயம் பல இலக்கியக்கூட்டங்கள் கேலிக்கூத்தாக முடிந்து போகவும் இவர்களில் சிலர் காரணமாக இருந்துள்ளனர். தன் வெளிப்பாடு மட்டுமே நோக்கமாகவும் பல இதழ்கள் வந்து போயின. எப்படி இருந்தாலும் நல்ல இலக்கியப் படைப்புகளின் உருவாக்கத்துக்கு சிற்றிதழ்களின் பங்களிப்பு என்பது மறுக்க இயலாதது. இன்றும் பலநூறு சிற்றிதழ்கள் தனிநபர்கள், நண்பர்கள் குழாம், சங்கங்கள், படைப்பாளர் இணைவுகளின் மூலம் வெளியிடப் படுகின்றன. இலக்கியவாதிகளும் காலப்போக்கில் வெளித்தோற்ற அடையாளங்களை துறந்து சமூகத்தின் பொது அடையாளங்களுக்குள் நுழைந்து விட்டபோதிலும் சிற்றிதழ் இலக்கியத்தின் தனி அடையாளங்களை இன்றளவும் சிறுபத்திரிகைகள் தொலைத்துவிடவில்லை.மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம், வானம்பாடி காலம் என தனித்த இயக்கங்களாக ஒரு சமயத்தில் சிற்றிதழ் இயக்கம் இருந்திருக்கிறது. இன்றைய வலைப்பதிவுலகம் போலவே பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாக எண்பதுகளுக்குப் பிந்திய சிற்றிதழ்ச்சூழல் இருந்துள்ளது. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடரும் சில இதழ்கள் உட்பட தீர்மானமான இலக்குடன் வந்த இதழ்களும் அவற்றில் இருந்தன.சிற்றிதழ் பரவலாக்கத்தை இன்னொரு விதமாகவும் வலைப்பதிவோடு ஒப்பிட முடிகிறது. வலைப்பதிவுகளை இன்று திரட்டிகள் வழியாக வாசிப்பது போலவே சிற்றிதழ் திரட்டிகளும் அன்று இருந்தன.தமிழ்ச் சிற்றிதழ்களைச் சேகரித்து கண்காட்சி அமைத்துப் பாதுக்காத்த சில நண்பர்களுக்கு எல்லா சிற்றிதழாளர்களும் தங்கள் சிற்றிதழின் ஒரு பிரதியை அனுப்புவது வழக்கமாக இருந்தது. கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நசன் அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். அவர் தான் சேகரிக்கும் சிற்றிதழ்களின் விவரம் முகவரி மற்றும் சில குறிப்பிட்ட படைப்புகளின் அறிமுகம் அடங்கிய காலாண்டிதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அந்த இதழின் பெயர் சிற்றிதழ்ச் செய்தி. சிற்றிதழ்ச் செய்தி இதழ் தமிழில் வெளியாகும் அனைத்து இதழ்கள் பற்றிய விவரங்களை இதழாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பரிமாறி சிறந்த தகவல் திரட்டியாக செயல்பட்டு வந்தது. பொள்ளாச்சி நசன் இப்போது தமிழம்.நெட் தளத்தின் மூலம் தனது சேகரிப்புக்களை பதிவு செய்திருப்பதோடு தாய்த்தமிழ்ப் பள்ளியையும் இணையம் வழி தமிழ் கற்பிக்கும் சேவையையும் வழங்கி வருகிறார்.அடுத்து திருச்சியைச் சேர்ந்த நண்பர் தி .மா சரவணன் என்பவர் தனது கலைநிலா நூலகத்தின் மூலம் தமிழ் சிற்றிதழ்களை சேகரித்து தமிழகம் முழுவதும் அவற்றை கண்காட்சியாக வைத்து சிற்றிதழ்ப் பரவுதலுக்கு உறுதுணையாக இருந்தார். அவரும் சிற்றிதழ் விவரங்கள் அடங்கிய வெளியீடுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.கோவையைச் சேர்ந்த குன்றம் இராமரத்நம் என்ற படைப்பாளர் தாராமதி என்ற சிற்றிதழை நடத்தி வந்தார். அவரும் பிற சிற்றிதழ் நண்பர்களுமாக தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத்தை தோற்றுவித்தனர். பின்னர் அவர் தொடங்கிய முங்காரி என்ற சிற்றிதழ் தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாக நடத்தப் படுகிறது. சங்கத்தில் இணையும் உறுப்பிதழ்கள், சங்கத்துக்கு வரும் இதழ்கள் போன்றவை இந்த மாத இதழில் தொடர்ந்து அறிமுகம் செய்யப் படுகின்றன. அதில் தரப்பட்டுள்ள முகவரிகளில் தொடர்பு கொண்டு தேவையான சிற்றிதழை வாசகர்கள் நேரடியாகப் பெற இயலும்.முங்காரிஆசிரியர்: குன்றம் மு.இராமரத்நம்புலமைப் பண்ணை,சுகர்கேன் அஞ்சல்,கோவை-641 007.தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்ற சில நண்பர்கள் உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். அதன்பொதுச் செயலாளர் வதிலை பிரபாவின் மகாகவி இதழே சங்கத்தின் குரலாக ஒலிக்கிறது. இதிலும் இந்தச் சங்கத்தின் உறுப்பிதழ்கள் தொடர்ந்து பட்டியலிடப்பட்டு அறிமுகம் செய்யப் படுகின்றன. பிற சிற்றிதழ்களும் அறிமுகம் செய்யப் படுகின்றன.மகாகவிஆசிரியர்: வதிலை பிரபா9-16-18/2, ஒற்றைத் தெரு,வத்தலக்குண்டு- 624 202திண்டுக்கல்மாவட்டம்வெகுஜன இதழ்களின் சமூக அரசியல் பரப்புரைகளின் கயமைகளை தோலுரித்துக் காட்டும் அற்புதமான கருத்துக் களஞ்சியங்களாக சிற்றிதழ் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்த விஷயங்களின் புரிந்த பலவற்றின் புரியாத, தெரியாத பக்கங்களை அறிந்து கொள்ள முடியும். ஆழமான வாசிப்பை விரும்புகிறவர்களுக்கு வாசித்தலின் பின்னான சிந்திப்பை தரும் படைப்புக்களை, மக்களின் மொழிகளில் உருவான படைப்புக்களை வாசிக்கலாம்.

நன்றி : சிந்தாநதி

சௌந்தர சுகன்

சௌந்தர சுகன் 250
1987 ஜூனில் ஆரம்பித்து இந்த மாதம் தனது 249 வது இதழை வெளியிடும் வரை தொய்வில்லாமல் ஒரு தனிநபர் சிற்றிதழ் நடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் தந்து, அதற்கு மேலாக பத்தோடு பதினொன்று என்ற அளவில் இல்லாமல் இன்றுவரை தனித்துவம்மிக்க இதழாக வெளி வருகிறது சௌந்தர சுகன்.கையெழுத்து இதழாக ஆரம்பித்து அச்சிதழாக தொடர்ந்தபின் கணினி அச்சுக் கோர்ப்பில் ஆப்செட்டில் வந்த போதும் அதன் அடையாளமோ உள்ளடக்கத்தின் தீர்க்கமோ மாறவே இல்லை. விளம்பரங்களே வெளியிடாமல் எந்த சமரசங்களும் செய்து கொள்ளாமல் வெளி வருகிறது என்பதும் சுகனை பிற சிற்றிதழ்களில் இருந்து தனித்துவப் படுத்துகிறது.வண்ணப்படங்களும் பகட்டுகளும் இல்லை. கலைநயமிக்க ஓவியங்கள் அல்லது படைப்புக்கு தேவையான புகைப்படங்கள் இவை தவிர பெரிய அலங்காரங்கள் எதுவும் இல்லை. ஆனால் 120 பக்கங்களுக்கான உள்ளடக்கத்தை சுமார் 54 பக்கங்களில் நெருக்கமாக அச்சிடுவது அதன் சிக்கனம் எனலாம். பத்து ரூபாயில் தரமான உள்ளடக்கத்துடன் இருபது ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவரும் சிற்றிதழ்...இளமை அரும்பிய பருவத்தில் தஞ்சை பூமியில் இருந்து க.சு.சரவணன் வெளியிடத் தொடங்கிய சுந்தரசுகன் பின்னர் பதிவுக் காரணங்களுக்காக சௌந்தரசுகனானது. கடித இலக்கியம் இதன் பயணத்தில் மிகப்பெரிய அடையாளம். இலக்கியவாதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட இலக்கிய வாழ்வியல் சுவை கொண்ட கடிதங்களை அவர்களிடமிருந்து பெற்று கடித இலக்கியமாக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது சுகன்.ஆண்டு தோறும் தஞ்சை பிரகாஷ் என்ற படைப்பாளியின் நினைவுமலர் வெளியிடுகிறது. அரசியல் சமூகத்தளங்களில் எண்ணக்கண் திறப்போம் என்ற முழக்கத்துடன் தீர்க்கமான தலையங்கங்கள், கூர் என்ற பெயரில் வாசகர்களின் விரிவான விமர்சனப் பக்கங்கள், விளக்கமான புத்தக விமர்சனங்கள், சமூகவியல் படைப்பாக்க போராளிகளை அறிமுகம் செய்யும் நேர்முகங்கள், ஜனரஞ்சக இதழ்களில் காண முடியாத தரமுள்ள கதைகள், கவிதைகள் என சுகனின் படைப்புலகம் சிந்தனைத் தளத்தில் தாக்கத்தை தரவல்லதான சுற்றத்தைத் கொண்டது.இன்று பிரபலமடைந்துள்ள, பிரபலமடைந்து வரும் பல கவிஞர்கள், கவிதாயினிகள் ஆரம்ப களமாக சுகனில் கவிதை புனைந்தவர்கள். குறிப்பாக தஞ்சைப்பக்கமிருந்து வந்த எந்தக் கவிஞரும் சுகனில் எழுதியிராமல் இருந்திருக்க இயலாது. விளம்பரங்களை ஏற்காமல் தனிமனித உழைப்பில் பொருளில் தொடரும் இந்தச் சிற்றிதழ் மார்ச் இதழ் 250 வது இதழாக மலர்கிறது.249 வது இதழ் தலையங்கத்தில் கடந்து வந்த பாதை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அந்த வெளியீட்டு விழாவை நண்பர்களோடு கொண்டாட முடிவு செய்து அதுபற்றி கூறுவது..."தலையங்கப் பக்கத்தில் இந்த விழா பற்றிய செய்திகள் தேவையா என்று சிலர் நினைக்கக் கூடும். இது சுகன் இதழ் விழா... ஒரு சிற்றிதழ் தமிழ்ச் சமூகத்தில் எப்படி புரண்டு வருகிறது என்பதை அவசியம் பதிவு செய்ய வேண்டும். இத்தகையப் பதிவுகள் தான் நாளைய நம்பிக்கைகளை முளைக்க வைக்கும் தட்பவெப்பமாய் அமையும். இந்த விழா நோக்கம் பெரும் கூட்டத்தை கூட்டுவது அல்ல. உணர்வாளர்கள் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் தம்தம் வெப்பத்தை பரிமாறிக் கொள்ளும் சந்திப்பு தான் இது. அடுத்தக் கட்ட பாய்ச்சலை எப்படி நிகழ்த்துவது என்பதை வேறு எங்கு போய் கற்க முடியும். நாம் கூடி, நாம் பேசி நாம் சிந்தித்து நாம் தானே செயலாற்ற வேண்டும்...என்ன சரிதானே?"சௌந்தர சுகன் - 250 - விழா16-3-2008 - ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில்...(ஜூபிடர் திரையரங்கம் அருகில்)
*சௌந்தரசுகன்அம்மாவீடுசி-46,
இரண்டாம் தெருமுனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613007
ஆண்டுச் சந்தா ரூ.120.

நன்றி : சிந்தாநதி

பனிக்குடம்

சிற்றிதழ் அறிமுகம்: பனிக்குடம்

பெண்ணின் அடையாளம் எது?
"பனிக்குடம்" கவிஞர் குட்டி ரேவதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். பெயர் பறைசாற்றுவதைப் போல இது பிரத்யேகமான பெண்ணிய இதழ்.""பெண்ணிய மொழிக்கான உச்சரிப்புகளைக் கண்டுபிடித்தலும் பெண்ணியம் ஓர் இயக்கமாக வளர சமன்பாடுகளை ஆக்கும் பெண்ணியக் கவிதைகளைப் படைத்தளித்தலும் பெண்ணியக் கருத்தாக்கத்தை உரையாடலாக்கி, அதிர்ந்து பரவச் செய்தலும் இவ்விதழின் முக்கியமான பணிகள்"" என்கிறார் ரேவதி.பிரமிளின் பிரசுரிக்கப்படாத கவிதை, பாப்லோ நெருடாவின் கவிதை குறித்த பார்வை, ஃபமிதா ரியாஸின் ஐந்து கவிதைகள், சுகிர்தராணியின் கவிதைகள், இரா.கை. சங்கரின் கவிதை என்று உண்மையிலேயே பனிக்குடத்தை வியாபித்திருக்கின்றன கவிதைகள்.அமிர்த ஷெர்கில் மற்றும் புகைப்படக் கலைஞர் டோரதியாலாங் பற்றிய குறிப்புகளும் படங்களும் உள்ளன. குறிப்புகள் மேலோட்டமாக இல்லாமல் விரிவாக இருந்திருக்கலாம்.உமா மகேஸ்வரியின் "வெறும் பொழுது" பற்றிய மாலதியின் விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு வித்தியாசமான தொனியில் இருக்கிறது.கவிதை, கவிதை சார்ந்த பரிமாற்றங்களுமே பத்திரிகையின் உயிர்ச் சரடாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாலும் அதில் பெண்மொழி என்பதைத் தாண்டிய ஒரு தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதும் அவசியம். பெண் என்பவள் உடல் சார்ந்தவள் மட்டுமே இல்லை. ஆனால் காலம் காலமாக அவள் அதுதான் என்று அவளுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்ணியம் அந்தச் சித்தரிப்புகளை உடைத்து வெளிவருவதை விட்டு அதையே அதன் அடையாளமாக, முகவரியாக மாற்றிக்கொள்ள முனைவது அவசியமா?இதழ் வடிவமைப்பிலும் இன்னும் சிறிது கவனம் செலுத்தலாம்.விலை: ரூ. 10, ஆண்டு சந்தா ரூ. 50,
23, அகத்திமுத்தன் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.

நன்றி : சிஃபி.காம்

புது எழுத்து

சிற்றிதழ் அறிமுகம் : புது எழுத்து
எண்ணிக்கையில் குறைவான வாசகர்கள், குறைவான முதலீடு, குறுகிய வாழ்வு ஆகிய தன்மைகளை கொண்டிருப்பதாலேயே “சிறுபத்திரிகை” எனும் பெயர் நிலைபெற்றுவிடவில்லை. தீவிர இலக்கியத்தின் மறுபெயர் சிறுபத்திரிகை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஐரோப்பா, அமெரிக்கா அகிய நாடுகளின் தீவிர இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்தும். இலக்கியத்தின் மதிப்பும் அதில் மக்களின் ஆர்வமும் பொதுவாகத் தாழும்போது இயல்பான நிகழ்வாகவும் துணிகரமான எழுச்சியுடனும் அதை எதிர்த்து வினையாற்றி வந்திருப்பவை “சிறுபத்திரிகைகள்” தாம். அவை ஒருவிதமான எதிர் நீரோட்டத்தை தமது இயக்கத்தில் வைத்துள்ளன.அதன் இயக்கம் எப்போது நிற்கும் (பணமின்மை, தரமான படைப்புகள் இன்மை) என்ற அநிச்சய நிலையே அவற்றின் தரநிர்ணய அளவுகோல் எனச்சொல்லலாம்.
அவ்வாறான சிறுபத்திரிகை இயக்கத்தின் வழியில் “புது எழுத்து” இதழும் ஒன்று. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியற்று வெளிவரும் இச்சிற்றிதழ் ஒவ்வொரு இதழிலும் இரண்டு புத்தகங்களை உள்ளடக்கியது. முதல் புத்தகத்தில் கடந்த மற்றும் சமகால இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும், இரண்டாவது புத்தகத்தில் மேற்கத்திய இலக்கிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக அவர்களின் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும் இடம்பெறுகின்றன.
தவிர, தரமான இலக்கிய படைப்புகளை புது எழுத்து பதிப்பகம் நூல்வடிவில் வெளியிட்டும் வருகிறது.
புது எழுத்து வாசிக்க விரும்புவோர் பாலைக்குயில்கள் நூலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
புது எழுத்து குறித்த சந்தா மற்றும் இதர தொடர்புகளுக்கு,
மனோன்மணி,
39, ஜே.கே.சி. தெரு,காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,தமிழ்நாடு-635113.
தொலைபேசி : 04343-252665,மின்னஞ்சல் : puduezuthu@gmail.com
- பாம்பாட்டிச் சித்தன்

நன்றி : வலம்புரி இதழ்

Sunday, July 20, 2008

மணல் வீடு

மணல் வீடு - சிற்றிதழ் அறிமுகம்
சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளும், இடைநிலை இத‌ழ்க‌ளும் செய்ய‌த் த‌ய‌ங்கும் அல்ல‌து செய்ய‌விய‌லாத‌ எவ்வித‌மான‌ முய‌ற்சிக‌ளையும் சிற்றித‌ழால் செய்துவிட‌ முடியும். மணல்வீடு முதல் இதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதழ் வந்தவுடன் சில கவிதைகளை வாசித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகாக ஹரிகிருஷ்ணின் "நாயி வாயிச்சீல" என்ற சிறுகதையை வாசித்தேன். அர‌வாணி த‌ன் வாழ்வில் ச‌ந்திக்கும் அவ‌ல‌ங்க‌ளை துல்லியமாக ப‌திவு செய்திருக்கும் முக்கிய‌மான‌ சிறுக‌தை.தொட‌ர்ந்து ம‌ற்ற ப‌குதிக‌ளையும் வாசிக்கும் போது ஒரு முழுமையான‌ சிற்றித‌ழாக‌ முத‌ல் இத‌ழில் த‌ன்னை ம‌ண‌ல் வீடு நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.குறிப்பிட‌த்த‌க்க‌ பரிசோத‌னை முய‌ற்சிக‌ளாக‌ ராச‌மைந்த‌னின் "தெல்ல‌வாரியின் நாட்குறிப்பிலிருந்து", ஆதிர‌னின் "என்றார் க‌ட‌வுள்" ஆகிய‌ன‌ அமைந்திருக்கின்ற‌ன‌. இசை,இள‌ஞ்சேர‌ல்,சுப்ரபார‌தி ம‌ணிய‌ன், கூத்த‌லிங்க‌ம், த‌.ந‌.விசும்பு, பெருமாள் முருக‌ன், இன்பா சுப்பிர‌ம‌ணிய‌ன், ந‌ரன், இன்குலாப் மற்றும் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ஆகியோரின் க‌விதைக‌ள் இட‌ம் பெற்றிருக்கின்றன‌. ந‌ர‌னின் "எறும்புக‌ள் ப‌ற்றிய‌ சில குறிப்புகள்", இசை ம‌ற்றும் இள‌ஞ்சேர‌ல் ஆகியோரின் கவிதைகள் என‌க்குப் பிடித்திருந்த‌ன‌. பா.மீனாட்சிசுந்த‌ர‌த்தின் வ‌ச‌ன‌க‌விதைக‌ள் குறிப்பிடப் பட வேண்டியவை.பாமா, ம‌திக‌ண்ண‌ன், செல்வ‌புவியர‌ச‌ன் ஆகியோரின் சிறுக‌தைக‌ள், வே.மு.பொதிய‌வெற்ப‌ன்,ஆதிர‌ன்-வ‌சுமித்ர‌ ஆகியோரின் ப‌டைப்புக‌ள் இட‌ம் பெற்றிருக்கும் இவ்வித‌ழின் வாசிப்ப‌னுவ‌ம் சில‌ த‌ள‌ங்களை தொட்டு வ‌ருவ‌தாக‌ அமைகிற‌து.த‌லைய‌ங்க‌த்தில்,சிற்றித‌ழ் ம‌னித‌ மேம்பாட்டிற்கான‌ செய‌ல்த‌ள‌ங்க‌ளில் த‌னக்குரிய‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்ய‌ த‌யாராக‌ இருக்க‌ வேண்டும் என்று எழுதியிருப்ப‌து க‌வ‌னிக்க‌த் த‌க்கது. சிற்றித‌ழின் ப‌டைப்புக‌ள் அப்ப‌டி அமைந்திருக்க‌லாம், இப்ப‌டி அமைந்திருக்க‌லாம் என்று க‌ருத்து சொல்வ‌தைப் போன்ற‌ பைத்திய‌கார‌த்த‌ன‌ம் வேறொன்று இருக்க‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.சிற்றித‌ழ் த‌ன் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் ஓடை. அது ஏற்புக‌ளையும், நிராக‌ரிப்புக‌ளையும் பெரும்பாலும் பொருட்ப‌டுத்துவ‌தில்லை. அத‌ன் போக்கில் விட்டுவிடுவ‌து ந‌ல‌ம். ம‌ண‌ல் வீடு த‌ன‌க்கான‌ பாதையை அமைத்துக் கொள்வ‌தில் எந்த‌ச் சிர‌ம‌மும் இருப்ப‌தாக‌த் தோன்ற‌வில்லை.
தொட‌ர்புக்கு:மு.ஹ‌ரிகிருஷ்ண‌ன்,
தொலைபேசி: 098946 05371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
நன்றி : பேசலாம், வா.மணிகண்டன்

Friday, May 30, 2008

தென் ஆசியச் செய்தி

அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. அய்யாவின் சீரிய முயற்சியால் உலக தமிழர்களின் நலன் தாங்கிவரும் இதழ் தென் ஆசியச் செய்தி.

உலக தமிழர்களின் நலனை ஓங்கி ஒலிக்கும் தென் ஆசியச் செய்தியினை அனைவரும் வாங்கிப் பயனுற வேண்டும்.

இதழ் : தென் ஆசியச் செய்தி (திங்களிருமுறை)
ஆசிரியர் : திரு.பழ.நெடுமாறன்,நோக்கம் : தமிழர் நலம், தமிழீழம்......

விலை: தனி இதழ் :ரூ. 4.00,
ஆண்டுக்கட்டணம் : ரூ.100.00,
புரவலர் : ரூ.1000.00

முகவரி : 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை-04,
தொ.பேசி: +91-44-24640575 இணையதளம்: http://thenseide.com

Saturday, May 24, 2008

சிந்தனையாளன்


மார்க்சிய பெரியாரிய அம்பேத்காரிய சிந்தனைகளைத்தாங்கி, உலகத் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தீவிர அரசியல் விமரிசனங்களோடு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரியல் அறிஞர் தோழர்.வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருவது "சிந்தனையாளன்" திங்கள் ஏடு ஆகும்.


"இந்தியாவில் பொதுவுடைமை மலர, மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சம உரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாச்சி அமைய ஆவன செய்தல்" என்ற முழக்கத்தோடு,


சம உரிமைக்காவலர்கள் என "மார்க்சு, லெனின், சிங்காரவேலர், பெரியார்" படங்களையும், சமூக நீதி காவலர்களாக "புலே, பெரியார், அம்பேத்கர், லோகியா" ஆகியோரின் படங்களையும் தாங்கி வருகிறது.


இதன் கொள்கை முழக்கங்களாக,


உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! - மார்க்சு, எங்கல்சு


ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே ஒன்று சேருங்கள்! -இலெனின்


ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே ஒன்று சேருங்கள்! -பெரியார் ஈ.வெ.இரா

ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
சிந்தனையாளன்,
19, முருகப்பா தெரு (மாடி),
சேப்பாக்கம்,
சென்னை - 600 005.
பேசி: 044-2852 2862.
விலை:
தனி இதழ் : உரூவா.10,
ஆண்டுக் கட்டணம் : உரூவா.120,
வாழ்நாள் கட்டணம் : உரூவா.1000.


தமிழர்கள் அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டும்.

நன்றி.

Friday, May 23, 2008

சிற்றிதழ்கள்

அன்புத் தமிழ் உறவுகளே!

சமூக, கலை, இலக்கிய ஆர்வலர்களாலும் சிந்தனையாளர்களாலும் பெரும் போராட்டங்களுக்கிடையில் நடத்தப்பெற்று வரும் சிற்றிதழ்கள் என்று அறியப்பெறும் தமிழ் இதழ்களை அறிமுகப்படுத்துவதே இத்தளத்தின் நோக்கமாகும். இவ்விதழ்கள் ஏனைய வெகுமக்கள் ஊடகங்களிலிருந்து மாறுபட்டு நல்ல மொழி மொழிநடையும், தீவிர சிந்தனைகளோடும் தத்தமது தளம் சார்ந்து ஆழ்ந்த கருத்துக்களோடும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் நமது பண்பாடும், மொழியும் காக்கப்படுவதோடு, வாசகர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளையும் ஏற்படுத்திவருகின்றன.

இத்தகைய இதழ்களை தொடர்ந்து படிப்பதோடு இவற்றின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இவ்விதழ்கள் பற்றிய சிறு அறிமுகமும், தொடர்பு முகவரிகளையும் இங்கே அறியத்தருகிறோம்.

நன்றி!