Wednesday, January 14, 2009

கவிதாசரண்

நவீனத் தமிழிலக்கிய விவாதப் பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் இதழ் 'கவிதாசரண்'.

கவிதாசரண் என்கிற தனிமனிதனின் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பல தலித்திய இதழ்களுக்கு முன்னோடி இதழ் இது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவிதாசரண் முதலிதழ் முகிந்தது.

'தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்' எனும் முனைப்புடன் கதை, கவிதை, கட்டுரை என முழுக்க இலக்கியம் சார்ந்து மட்டுமே ஓராண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.

முதல் இதழ் தொடங்கப்பட்டபோது 44 பக்கங்களில் வெளிவந்தது. தனி இதழ் 3 ரூபாயும், ஆண்டு சந்தா 36 ரூபாயுமாகவும் இருந்தது. 3 ஆவது ஆண்டிலிருந்து படிப்படியாக 60 பக்கம், 80 பக்கம் எனப் பக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது. சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் (A8 size) 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து (46 ஆவது இதழிலிருந்து) பெரிய அளவில் (A4 size) இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது.

1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் இலக்கியத்துடன் சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கிய வெளியில் தலித்தியம், பெரியாரியம் சார்ந்து இயக்கங்கொள்ள தொடங்கி இன்றுவரை அந்நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் வந்து கொண்டிருக்கிறது.

"தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்" என்கிறார் ஆசிரியர் கவிதாசரண்.

மரபுகளையும், நீதிகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது கவிதாசரண்.

அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, தொ. பரமசிவம், நா. மகம்மது, ஸ்டாலின் ராஜாங்கம், பாரி செழியன், சுகுணா திவாகர், வளர்மதி போன்றோர் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

விவாதத்திற்குரிய கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பெ.சு. மணி, தி.க.சி. போன்றவர்கள் தொடர்ந்து விரிவான கடிதங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது கவிதா சரண்.

விமர்சன ரீதியில் சிலருக்கு அதிர்ச்சியையும் திடுக்கிடுதலையும் கொடுத்த இதழ் கவிதா சரண். இத்தகைய அதிர்ச்சியும் திடுக்கிடுதலும் இன்றும் தொடர்கிறது. எந்த விஷயத்தையும் ஆழமாக விவாதிப்பது, எந்த தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் கருத்தியலின் பிரதிநிதியாக விமர்சிப்பது கவிதாசரணின் போக்காக அமைகிறது.

சுந்தர ராமசாமியின் படைப்பை முதன் முதலில் விமர்சித்து வந்த 'ராமசாமியின் சொந்த முகம்' எனும் கட்டுரையும் தலித்தியம், பிராமணியம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் குறிப்பிடத்தக்கன.

சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இவ்விவாதங்களில் கலந்து கொண்டனர்.

"தயவு தாட்சண்யமின்றி அணுகுவதால் நண்பர்கள் கூட முரண்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சுய விளம்பரத்திற்காக எதையும் செய்வதில்லை" என்கிறார் கவிதாசரண்.

இதழ் தயாரிப்பதில் ஒளியச்சு தொடங்கி விற்பனை வரை கவிதாசரணும் அவரது துணைவியாரும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆசிரியர் கவிதாசரணைப் பற்றி:

கவிதாசரண், கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஒரே மகனையும் மூளைக் காய்ச்சல் நோயால் 1980இல் பறிகொடுத்தவர். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கவிதாசரணை ஆரம்பித்தார். 'கவிதாமணி' என்கிற பெயரில் 1957லிருந்து 1972 வரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான்கு நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 இலக்கியத் திறனாய்வு நூல்கள், 1 கவிதைத் தொகுப்பு என 12 நூல்களை 'பிறைமுடி' எனும் தமது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.

'கவிதாமணி' என்பது பட்டப் பெயரைப் போல் இருப்பதால் கவிதாசரண் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.

1970களில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் (ஜேக்டி) சென்னை மாநகரத் தலைவராக இருந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.

தற்போது 70 வயது ஆனாலும் ஓர் இளைஞனுக்குரிய உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

"பொருளாதார ரீதியாக இதழ் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான உடல் உழைப்பிலும் என் துணைவியார் பங்கு முக்கியமானது. இவர் தான் எனக்கு பக்கபலமாக, உந்துசக்தியாக இருக்கிறார். அதனால்தான் என்னால் இந்த வயது வரை பொருளாதார சிக்கல் இருந்தாலும் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிகிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன் கவிதாசரண்.

அவருடன் சிறு நேர்காணல்:

கவிதாசரண் இதழை நடத்துவதற்காக நோக்கம் என்ன?

"சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில் கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.

வேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்".

இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

"கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.

நான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.

காலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன். சில அரசியல் பெரும் புள்ளிகளும், பத்திரிகையாளர்களும் கவிதாசரணை தொடர்ந்து படித்துவருகின்றனர்.

இலக்கிய வாசகர்களின் ஆதரவும் இருக்கிறது. சிறு பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகும் இதழ் கவிதாசரண்.

சந்தா விவரம்:

தனி இதழ் : ரூ20/-
10 இதழ்கள்: ரூ200/-
25 இதழ்கள் : 500/-
50 இதழ்கள்: ரூ1,000/-
வெளிநாடுகளுக்கு:
தனி இதழ் 2 டாலர்

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

கவிதாசரண்
31 டி.கே.எம். நகர்,
சென்னை- 600 019.
தொலைபேசி: 044- 2574 01 99
மின்னஞ்சல்:kavithasran@yahoo.காம்

நன்றி : அந்திமழை

கூட்டாஞ்சோறு

" இயக்கத்தின் நுட்பமும்
இயங்குவதன் விசையும் உழைப்பின்
விரல்களில்தான்.
வடிக்கும் ஆற்றலை
இயக்கும் ஆளுமையை
கூத்தாய் கொண்டாட்டமாய்
பாட்டாய் இசையாய் இலக்கிய வடிவாய்
படைப்போம்.
மக்களுடன்...
மக்களிடமிருந்து...
மக்களுக்காக...
எழுத்தாய் இயக்கமாய் எழுவோம்"

மக்களுக்கான கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'கூட்டாஞ்சோறு' காலாண்டிதழின் (ஜுலை-செப்.2005) தலையங்கம் இது.

முதல் இதழ் 2004 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை 'மணிக்கொடி' மூத்த எழுத்தாளர் சிட்டி வெளியிட இளைய தலைமுறை எழுத்தாள÷ கவிஞர் ஆசு பெற்றுக்கொண்டார். மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் நோக்குடன் இவ்வாறு நிகழ்ச்சியை வடிவமைத்ததாகக் குறிப்பிடுகிறார்,இதன் ஆசிரியர் மயிலை பாலு.

இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் குழு: கே.பி. பாலச்சந்தர், சூரியசந்திரன். இரா. குமரகுருபரன், சிவசெந்தில்நாதன், தா. மணிமேகலை.

"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தென் சென்னை மாவட்டக் குழுவின் முயற்சியில் இவ்விதழ் வெளிவந்தாலும் இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இதழ் அல்ல. தமிழ்நாடு முழுக்க பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு மூத்த படைப்பாளியின் நேர்காணல், தமிழின் முக்கியமான ஓவியர்களின் அட்டைப் பட ஓவியம் முதலியன கூட்டாஞ்சோறின் சிறப்பம்சமாகும்.

கவிதைகளும், சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியிடப்படுகிண்றன. இருண்மையற்ற எளிமையான படைப்புகளையே வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது கூட்டாஞ்சோறு.

முதல் இதழில் அம்பேத்¸¡ர் பற்றிய சிறப்புக் கட்டுரை, இரண்டாம் இதழில் விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரை வெளியானது.

தொடர்ந்து பெரியாரின் 125ஆம் ஆண்டை முன்னிட்டு பெரியாரின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து ஒரு கட்டுரை (அக்-டிசம்பர் 2004) இதழில் வெளியானது. பரவலாக பேசப்பட்ட கட்டுரை இது,

மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் நூற்றாண்டையொட்டி 'தாய்' நாவல் குறித்தும் அது தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவான கட்டுரை(ஏப்-ஜூன் 2005) இதழில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் குறித்த கட்டுரை வெளியானது. அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் அரவாணிகளைப் பற்றியும் அவர்களது கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றியும் விரிவானதொரு கட்டுரை இதே இதழில் வெளியானது.

நவீன தமிழ் இலக்கியச் சூழலில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதும் கூட்டாஞ்சோறின் உள்ளீடுகளில் ஒன்றாகும். அவ்வகையில் பெண்மொழி பற்றிய ஒரு கலந்துரையாடலை கூட்டாஞ்சோறு நிகழ்த்தியது.

பத்மாவதி விவேகானந்தன், பா. ¦ƒயப்பிரகாசம், லீனா மணிமேகலை, அரங்க மல்லிகா, அ. வெண்ணிலா, த. மணிமேகலை, மயிலை பாலு உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை கூட்டாஞ்சோறு வெளியிட்டு வருகிறது.

வல்லிக்கண்ணன், இன்குலாப், சிற்பி, ஆ.சிவசுப்பிரமணியன், அ. மார்க்ஸ், ஈரோடு தமிழன்பன், தொ. பரமசிவம், ஆஷாபாரதி ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறு.

இதுவரை ஆதிமூலம், விஸ்வம், புகழேந்தி, நெடுஞ்செழியன், வின்சி ஆகியோரின் ஓவியங்கள் அட்டையை அலங்கரித்து வந்திருக்கின்றன. கூட்டாஞ்சோறு சார்பில் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் மயிலை பாலு பற்றி:

பத்திரிகையாளராகப் பணியாற்றும் மயிலை பாலு ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்.

'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்', 'நள்ளிரவில் சுதந்திரம்' (வி.என். ராகவனுடன் இணைந்து, 'வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்', 'சூறாவளி' (சீன நாவல்) ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நள்ளிரவு சுதந்திரம் நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றிருக்கிறார்.

இனி அவருடன் சில விநாடிகள்....

கூட்டாஞ்சோறின் நோக்கம் என்ன?

"இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது, முற்போக்குச் சிந்தனையுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனை இணைப்பை உருவாக்குவது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்திருக்கும் ஒரே சிந்தனை உடையவ÷¸ளை ஒருங்கிணைப்பது, புதிய படைப்பாளர்களிடம் மாற்றுச் சிந்தனையை முன் வைத்து எழுதத் தூண்டுவது, எதார்த்தவாதத்தை நோக்கி இளம் படைப்பாளர்களைத் திருப்புவது ஆகியவை கூட்டாஞ்சோறின் முக்கிய நோக்கங்களாகும்".

கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா?

"ஆசிரியர் குழு, நிர்வாகக் குழு என இதழுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லோரது அனுபவமும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு ஆகிறது. அத்துடன் கூட்டு முயற்சி தேவை என்பதாலும், அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதாலும் கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டோம்" என்கிறார், ஆசிரியர் மயிலை பாலு.

கூட்டாஞ்சோறு- இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக வந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ 10/
ஆண்டு சந்தா ரூ 40/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
'கூட்டாஞ்சோறு',
3; சி பிளாக், வள்ளீஸ்வரன் தோட்டம்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை- 600 028.
செல்பேசி: 9444 4140344/ 9444 271479

நன்றி : அந்திமழை

முகம்

தமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளிவருகிறது 'முகம்'.

தமிழ் அறிஞர்களின், சாதனையாளர்களின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவரும் இதழ் 'முகம்'. இதன் ஆசிரியர் மாமணி. முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. ஒரு மாதம் கூடத் தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்துள்ளன ( ஆகஸ்டு 05 வரை). ஆரம்ப ஓராண்டுகால அட்டையை பாரதியார், புதுமைப்பித்தன், என மறைந்த தமிழ் இலக்கிய அறிஞர்கள் அலங்கரித்தனர். பிறகு நெல்சன் மண்டேலா, நேரு, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது படங்கள் முகத்தின் அட்டையை அலங்கரித்தது. இப்படி 236 பேருடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது. அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளும், சிறுகதைகளும் உண்டு.

என்.எஸ்.கிருஷ்ணணின் கிந்தனார் காலாட்சேபத்தால் ஈர்க்கப்பட்டு மாமணியும் 'கிந்தனார் பதில்கள்" எனும் கேள்வி - பதில் பகுதியை முகத்தில் எழுதத் தொடங்கினார். எள்ளல் தொனியுடன் எழுதப்படும் இக்கேள்வி பதில்கள் 'முகம்" வாசகர்களிடம் தனிச் சிறப்பு பெற்றவை.
எடுத்துக்காட்டாக இரண்டு கேள்வி - பதில்கள்

கே: கணவன் முன்னால் செல்ல, மனைவி பின்னால் செல்வது நல்லதா? மனைவி முன்னால் செல்ல கணவன் பின்னால் செல்வது நல்லதா?

ப: பின்னால் வரும் மனைவி மேல் நம்பிக்கை உள்ள கணவன், முன்னால் செல்லலாம். பின்னால் வரும் கணவன் மேல் நம்பிக்கை உள்ள மனைவி முன்னால் செல்லலாம். சாலைப்போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருவரும் இணைந்து செல்வது எல்லாவற்றிலுமே நல்லதுங்க.

கே: நீதியை மதிப்பவர்கள் யார்?

ப: நிதியை மதிக்காதவர்கள்.

இப்படி எள்ளலும் குத்தலுமான பதில்கள் மூலம் சிந்தனையைத் தூண்டுபவர் மாமணி. இந்தப் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறேன். பிறகு முப்பது நாள்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் மெருகேற்றுகிறேன் ' என்கிறார் மாமணி. கேள்வி பதில்களை தொகுத்து 'கிந்தனார் பதில்கள்", கிந்தனார் சிந்தைனைகள்" என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 200 பேரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். எழுத்தாளர்களையும் சாதனையாளர்களையும் வாழும்போதே கவுரவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்களுக்கு அவ்வப்போது பாராட்டு விழாவையும் நடத்துகிறார் மாமணி. ஆய்வாளார் ஆ.இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகத்தினுடைய உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெ.கி. பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் முகம் மூலம் அறியப்பட்டவர்கள்.

இதழில் தற்போதைய சிறப்பாசிரியராக முனைவர் இளமாறன் செயல்படுகிறார்.
முகமாமணி ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 'உண்மையின் சிறகுகள்'(கவிதை), 'தாயே" (குறுங்காவியம்) பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், ஜீவாநாரண துரைக்கண்ணன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும், 'யாருக்காக சுமந்தார்', மாமணியின் சிறுகதைகள் 60 ' எனும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் ' மண்டோதரியின் மைந்தன்' எனும் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் கொள்கை பிடிப்புள்ளவர். சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இது போன்ற பத்திரிக்கைகளை தேடிப் படிப்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பெற உதவக் கூடும்.

ஆண்டு சந்தா : ரூ. 60
தனி இதழ்: ரூ. 5
பக்கங்கள்: 32
பத்தாண்டுக் கட்டணம்: ரூ. 500
புரவலர் நன்கொடை: ரூ.1000

தொடர்பு முகவரி:
முகம்
10, 68 ஆம் தெரு,
11-ஆம் பிரிவு,
கலைஞர் நகர்,
சென்னை - 600 078.
தொலைபேசி: 044 - 24802684; 044- 24897995

நன்றி : அந்திமழை

நிழல்

ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள் பறந்து பறந்து அடிக்கும் நாயகன், நாயகனைத் துரத்தித்துரத்திக் காதலிக்கும் நாயகி என வழக்கமான இத்தகைய தமிழ் சினிமாக்களின் நிழல் படாத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம். அத்தகைய ரசனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன சினிமாவிற்கென 'நிழல்', 'செவ்வகம்', படப்பெட்டி' போன்ற ஒருசில இதழ்களே வெளிவருகின்றன.இவற்றில் முக்கியமானது 'நிழல்'. தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. நிழல். இது நவீன சினிமாவிற்கான களம். ஆசிரியர் பா. திருநாவுக்கரசு.

2001ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக 22 இதழ் வெளிவந்து திரைப்பட இதழியலுக்கு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. இப்போது (ஜூலை - ஆகஸ்டு 2005) 5 - ஆம் ஆண்டு சிறப்பிதழாக வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், அவர்களது திரைப்படங்கள், சினிமா பற்றிய பயிற்சியும், உலக திரைப்பட வரலாறு மற்றும் இந்திய திரைப்பட வரலாறு என வாசகர்களுக்கு தேவையான தரமான சினிமாவைப் பற்றிய புரிதலைத் தரும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறந்த படத்தின் கதை வசனத்தை வெளியிடுவது நிழலின் சிறப்பாகும். அத்துடன் ஒவ்வொரு இதழிலும் பத்துக் குறும்படங்கள் பற்றிய விமர்சனம் வெளிவருகிறது. திரைத்துறை சார்ந்தவர்களின் பேட்டிகளும், திரைப்பட தொழில் நுட்பம் குறித்தும், உலக திரைப்பட விழாக்கள் குறித்தும் கட்டுரைகள் வெளிவருகின்றன. நவீன சினிமா குறித்து சிறந்த புலமை உடையவர் பா.திருநாவுக்கரசு. உலக சினிமா பற்றிய இவரது பார்வை விரிவடைய ஆடுகளம் இராமானுஜம் (ஈரான்), யமுனா ராஜேந்திரன் (லண்டன்), பாலு (சென்னை) போன்ற நண்பர்கள் உதவியுள்ளனர். தமிழகத்தில் குறும்படப் பயிற்சி பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறார். வெளிநாட்டில் வாழும் புலம் பெயர்ந்த நண்பர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளுக்கு தமிழகக் குறும்படங்களையும் விவரணப்படங்களையும் கொண்டு செல்கிறார். குறும்பட விழாக்களில் பங்கேற்கச் செய்து பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்.

'பாரீஸ் நண்பர்கள் வட்டம்' ஐரோப்பா முழுக்க, தமிழகக் குறும்படங்களும் விவரணப்படங்களும் திரையிடப்பட்டு, பத்து பேருக்கு எழுபதாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் ' நியூஜெர்ஸி தமிழ் சங்கம்' சார்பில் 2003 -ல் குறும்படவிழா நடைப்பெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற பதினாறு பேருடைய படங்களுக்கு 1,30,000 ரூபாய் எழுத்தாளர் ஜெயக்காந்தன் முன்னிலையில் பரிசளிக்கப்பட்டன. டொரான்டோவில் நடைப்பெற்ற மூன்றாவது 'சர்வதேச குறும்பட விழாவில் செங்கோ மோகனுக்கு அவர் இயக்கிய 'ஈசல்' படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. சுவிஸ் குறும்பட விழாவிற்கும் தமிழகத்திலிருந்து படங்கள் அனுப்பப்பட்டன.

தொகுப்பாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாசிரியர், குறும்படப்பிரச்சாரகர், இசை ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் பா.திருநாவுக்கரசு. வீணை தயாரிப்பது பற்றிய குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜூலை 2005 ல் தொடங்கப்பட்டுள்ள ' தமிழ்நாடு ஆவணப்படம் மற்றும் குறும்படப் படைப்பாளிகள் சங்கத்தின்' ஆலோசகராகவும் செயல்படுகிறார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி 'சொல்லப்படாத சினிமா' எனும் புத்தகத்தை சமீபத்தில் தொகுத்து வெளியிட்டார்.' சோழநாடன்' எனும் புனைபெயரில் இசைக் கலைஞர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார். இதுவரையில் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை வரலாறு, கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு, வீணை : அதன் பேர் தனம் போன்ற இசை தொடர்பான புத்தகங்களையும், 'இன்டர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு ' எனும் புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். அத்துடன் முக்கியமான பல மூன்றாம் உலகநாடுகளின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளையும் தம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது அனைத்து கலை இலக்கியப் பணிகளும் தொடந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவரிடம் இரண்டு கேள்விகள்:

* நவீன சினிமாவிற்காக இதழ் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

" பன்னீர்செல்வம், நாகர்ஜுனன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடத்தி வந்த சென்னைத் திரைப்பட சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தேன். அப்போது உலகப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தரமான சினிமா பற்றிய புரிதல் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. அந்த அடித்தளம் தான் இன்னும் நான் செயல்படக் காரணம். 1994 - ல் உலகச் சினிமா நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது சென்னை திரைப்படச் சங்கம் செயல்படவில்லை. எனவே 'நிழல்' நடமாடும் திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஆரம்பித்து, கிராமங்களுக்குச் சென்று தரமான வெளிநாட்டுத் திரைப்படங்களை எல்லாம் போட்டுக்காட்டினோம். இன்றுவரை அப்படி செய்கிறோம். 1994 - ல் 'மக்களுக்கான சினிமா' என்கிற புத்தகத்தை வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 'நிழல்' இதழை தொடங்கினோம்."

* தமிழ்க் குறும்படங்களின் போக்கு தற்போது எப்படி இருக்கிறது?

"வருடத்திற்கு நூறு படங்களாவது வருகின்றன. அவற்றில் பத்து படங்கள்தான் தேறுகின்றன. டிஜிட்டல் ஹேண்டி கேமரா வரவாலும் கல்லூரிகளில் தகவல் தொடர்பியல் கல்வி அதிக அளவில் அறிமுகப்படுத்தப்படுவதாலும் இது சாத்தியமாகிறது. 'எல்லோரும் படம் எடுக்க வந்துவிட்டர்கள்' என்றொரு கோஷம் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. சினிமா மக்களின் கைக்கு வருவதை பொருக்க முடியாதவர்களின் ஓலம் அது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் சினிமாவில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டாகவும் இன்று குறும்படங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போக்கு ஆபத்தானது. எப்படி இருந்தாலும் நல்ல படங்களைக் காலம் தீர்மானிக்கும்".

தமான சினிமா தேடல் உள்ளவர்களுக்கான சிறந்த இதழ் 'நிழல்'.(நவீன சினிமாவுக்கான களம்)

தொடர்பு முகவரி:
31/48 இராணி அண்ணாநகர்,
சென்னை - 600 078.
செல்பேசி : 94444 ௮௪௮௬௮

நன்றி : அந்திமழை

நவீன விருட்சம்

சோறு ஊட்டிய போதெல்லாம்
வேண்டாமென மறுத்தது குழந்தை
எதை காட்டியும் பலனில்லை
எல்லோருக்கும் பயம்
பசிதாங்காது குழந்தையென
வலுக்கட்டாயமாக ஊட்டினார்கள்
அப்படி திணித்த சோற்றை துப்பியது குழந்தை
கோபம், ஆச்சர்யம், பயம் சூழ்ந்து கொண்டதும்
அவர்கள்
என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தபோது
நான் சொன்னேன்
குழந்தையை மண்ணில் விளையாட விடுங்களென்று.
-சேக்கிழார்

படித்ததும் பிடித்துப் போகும் இக்கவிதை நவீன விருட்சம் 66 - 67வது இதழில் வெளியாகியுள்ளது. நவீன இலக்கியதிற்கென்று வெளிவரும் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கது நவீன விருட்சம் காலாண்டிதழ். 1988ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்விதழை தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அழகிய சிங்கர்; இதன் வெளியீட்டாளர் என்.சுப்பிரமணியன். ஆரம்பகாலத்தில் 16 பக்கத்தில் வெளிவந்தது. அப்போது விலை ரூ.2.50/-. முதல் இதழை நண்பர்கள் கோபிகிருஷ்ணன், ஆர்.சீனிவாசன், எம்.கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வந்தார். பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக நண்பர்கள் எல்லாம் விலகிவிட அழகிய சிங்கர் மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். சிற்றிதழை தனியாகத்தான் நடத்த முடியும். நண்பர்கள் சேர்ந்து நடத்துவது நீண்ட நாள் நீடிக்காது என்பது இவர் கருத்து.

“வணிக பத்திரிக்கைகளில் சிறுகதை படைப்பு வெளியிடுவது அருகி வருகின்றது. தரமான கவிதைகளும் அவற்றில் வெளி வருவதில்லை. சிறு பத்திரிக்கைகளில்தான் தரமான படைப்புகள் வெளிவருகின்றன. ஏதேனும் சாதிக்க வேண்டுமென்றால் சிறு பத்திரிக்கைகளின் மூலமாகத்தான் முடியும்” எனச் சொல்கிறார் அழகிய சிங்கர்.

பிரமிள், ஞானக்கூத்தன், இராஜகோபாலன், ஐராவதம் பாவண்ணன், பெருந்தேவி, ரிஷி, கிருஷாங்கினி, கோபிகிருஷ்ணன், எம்.கண்ணன், ஆகியோர் படைப்புகளுக்கு நவீன விருட்சம் களமாக திகழ்கிறது. நவீன விருட்சம் சார்பில் பதிப்பகமும் நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். விருட்சம் கவிதைகள் தொகுதி1, விருட்சம் கதைகள் தொகுதி1, ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுதொகுதி), வெங்கட்சாமிநாதனின் ‘உரையாடல்கள்’ போன்றவை இவர் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களாகும்.மற்றும் கவிதை தொகுப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

‘விருட்சம் இலக்கிய சந்திப்பு’ எனும் பெயரில் ஐந்தாண்டுகள் இலக்கிய கூட்டம் நடத்தி இருக்கிறார். அழகிய சிங்கர் இப்போது இந்தியன் வங்கியில் பந்தநல்லூர் கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். ‘ யாருடனும் இல்லை’ தொலையாத தூரம்’ எனும் இரண்டு கவிதை தொகுப்புகளையும், ‘சில கதைகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் இவரது படைப்புகளாகும்.

பதினேழு வருடங்களாக நடத்தி வருகிறீர்களே சலிப்பு ஏற்படவில்லையா?
“இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. சிற்றிதழ் நடத்துவது அரிப்பு என்று வல்லிக்கண்ணன் சொல்லுவார். எனக்கு அப்படியில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாசகர்களது கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. படைப்புகள் வாங்குவது, அதை ஒலியச்சு செய்வது, பிழை திருத்துவது என எல்லாவற்றையும் நானே செய்கிறேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க. ஒரு சிற்றிதழை இத்தனை வருடங்களாக நடத்தி வருவது உண்மையில் ஒரு சாதனைதான்.

தனி இதழ் : ரூ. 10/- ஆண்டு சந்தா: ரூ: 40/-
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
அழகிய சிங்கர்,
4/1, வள்ளலார் கோவில் கீழ வீதி,
மயிலாடுதுறை - 609001.
தொலைபேசி: 04364 - 221594
செல்: 94441 13205

என்.சுப்ரமணியன்,
7 ராகவன் காலனி,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
தொலைபேசி:044 - ௨௪௭௧0௬௧0

நன்றி : அந்திமழை

கல்வெட்டு பேசுகிறது

ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை சிற்றிதழ்கள்.வணிகப் பார்வைகளைத் தவிர்த்து சமூக நோக்கத்துடன் இயங்குபவை இவை.உலக அளவில் கலை, இலக்கியம்,அறிவியல், அரசியல் எனப் பல தளங்களிலிருந்து சிற்றிதழ்கள் தமிழில் வெளிவருகின்றன.சிற்றிதழ் வாசகர்கள்,தரமான வாசகர்கள் என்று நம்பப்படுகிறது.சில கவனிக்கத்தக்க சிற்றிதழ்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். முதல் இதழாக - கல்வெட்டு பேசுகிறது.

'கல்வெட்டு பேசுகிறது' முதலில் கல்வெட்டு என்னும் பெயரில் 1996 செப்டம்பரில் வெளிவந்தது.பிறகு 1997ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளிவரத் துவங்கியது.1999 வரை வெளியான இதழ்களில் தனித் தமிழ், தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளின் தாக்கம் அதிகமாயிருந்தது.

இடையில் பெரும்பான்மையான சிற்றிதழ்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல் நோய், கல்வெட்டு பேசுகிறது' க்கும் ஏற்பட இதழ் சிறிது காலம் வெளிவராமல் இருந்தது.

2001 அக்டோபரிலிருந்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.தனித் தமிழ், தமிழ்த் தேசியம் என்பதிலிருந்து விலகி நவீன இலக்கியம் சார்ந்து வெளிவரும் இவ்விதழை நண்பர்களின் உதவியுடன் நடத்திக் கொண்டிருக்கிறார் ஆசிரியர் சொர்ணபாரதி.

வல்லிக் கண்ணன், பிரபஞ்சன், இன்குலாப், ஜெயகாந்தன், தேவதேவன், விக்ரமாதித்யன், ஜெயமோகன், உள்ளிட்ட தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகலைக் கொண்டு இவ்விதழ் வெளியிட்ட இலக்கிய மலர் 2003 , தமிழ் இலக்கிய உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது.

1997, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் சிறந்த சிற்றிதழுக்கான தமிழ் சிற்றிதழ் சங்க விருதையும்,2003 ல் பண்ணைத் தமிழ்ச் சங்க விருதையும் 'கல்வெட்டு பேசுகிறது' இதழ் பெற்றிருக்கிறது.

'செய்வதைத் துணிந்து செய், சொல்வதைத் தெளிந்து சொல்' எனும் பாரதியின் முழக்கத்தோடு பதினாறு பக்கங்களில் சிறிய அளவில் வெளிவந்தாலும், நவீன இலக்கியத் தளத்தில் கலை ,இலக்கிய, அறிவியல் கருத்துகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதிலும்,விமர்சனங்களை முன்வைப்பதிலும் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்து வருகிறது.

இவ்விதழ் ஆசிரியர் கவிஞர் சொர்ணபாரதி 'மனவெளியளவு' எனும் கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.இவர் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

இதழ் தொடர்பு முகவரி
-----------------------

'கல்வெட்டு பேசுகிறது'
924ஆ, 29 வது தெரு,
பக்தவச்சலம் நகர்,
வியாசர்பாடி,
சென்னை- 600039
தொலைபேசி: 9444106998

நன்றி : அந்திமழை

கலை

"சுகமில்லாமலிருக்கும்
மச்சினனைப் பார்க்க
பிரபலமில்லா
சிற்றூ¦È¡ன்றிற்கு
பயணச் சீட்டு கேட்க
த¨¼யில்லா வசவுகளுடன்
இடையிலேயே இறக்கி விடப்பட்டேன்
இடைநில்லா பேருந்தொன்றிலிருந்து

இறங்கி விட்ட நானும்
கடந்து சென்ற மரங்களும்
நிற்கிறோம்
அறிமுகமில்லா நடுவழியில்

நானில்லா இருக்கையுடன்
பேருந்து நகர்ந்துவிட்ட போதிலும்
என்னோடு தங்கிவிட்டது
விரலிடை கரன்ஸி வித்தை காட்டிய
இரக்கமில்லா
நடத்துனரின் முகம்"

-ஏ.எம். ஜவஹர்
கலை மே 2005 இதழில்.........

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சார்பில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ் கலை. தோழர் கடலூர் பாலனும் கவிஞர் மணிமுடியும் இணைந்து தொடங்கிய இவ்விதழின் ஆசிரியர், மணிமுடி. முதல் இதழ் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய ஆசிரியர் குழுவில் கடலூர் பாலன், எஸ். பாரதிகணேஷ், கு. கல்யாணசுந்தரம், பூ. பார்த்தசாரதி ஆகியோர் செயல்பட்டனர். தற்போது மணிமுடியுடன் ஒருங்கிணைப்புக் குழுவாக காரைமைந்தன், தளவை ராசேந்திரன், பாவெல் சூரியன், வசந்த் பாரதி ஆகியோர் செயல்படுகின்றனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியம், தலித்தியம், மார்க்சியம் என கொள்கை சார்ந்தவர்களாக இருப்பது 'கலையின்' நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முதலாண்டு மாத இதழாக வெளிவந்த கலை, அதன்பிறகு இரு மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை (நவ.2005) 35 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப காலத்தில் 34 பக்கத்தில் 5 ரூபாயில் வெளிவந்தது. இப்போது 58 பக்கத்தில் 7 ரூபாய் விலையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழின் முக்கிய ஆளுமைகளான பாரதி, பாரதிதாசன், ஜீவா போன்றோரது கோட்டோவியங்களை அட்டையில் தாங்கி வருவது கலையின் முக்கிய அம்சமாகும்.

கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு, நூல் விமர்சனம் என வெளியிட்டு வருகிறது கலை.

காசி ஆனந்தன், தணிகைச் செல்வன், வீ. அரசு, பத்மாவதி விவேகானந்தன், விழி பா. இதயவேந்தன், அன்பாதவன் போன்றோர் கலை இதழில் பங்களிப்புச் செய்து வருகின்றனர். புதிய படைப்பாளிகளையும் கலை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

ஈரோடு தமிழன்பன், அ. மார்க்ஸ், இன்குலாப், வல்லிக் கண்ணன், தி.க.சி, கே.ஏ. குணசேகரன் போன்றோரது நேர்காணல்கள் அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளன.

இரண்டாயிரத்திலிருந்து ஆண்டுதோறும் சிற்றிதழில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது கலை. கவிதைக்கு பா. முத்துசாமி நினைவுப் பரிசும், சிறுகதைக்கு கவிஞர் கடலூர் பாலன் நினைவுப் பரிசும், கட்டுரைக்கு அறந்தை நாராயணன் நினைவுப் பரிசும் வழங்கி வருகிறது. இது படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் 'கலை'யின் சிறந்த பணியாகும்.

கலை இதழின் சார்பில் சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் மணிமுடி. சப்தர்ஹஸ்மிக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கும், பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின் நவீனத்துவம், தமிழியம் குறித்த கருத்தாக்கங்களை மையப்படுத்தி 2003இல் மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றும் நடத்தியிருக்கிறார். இந்த மூன்று நாள் கருத்தரங்கில் எழுத்தாளர் சிவகாமி, அ. மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்து, கோட்பாடு அடிப்படையில் இயங்கும் சிற்றிதழ்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றை திருச்சியில் நடத்தினார். இக்கூட்டத்தில் 18 சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து, இதுவரை கவிதைத் தொகுப்பு வெளியிடாத பெண் கவிஞர்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி, 13 பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'பெண்பா பேரிகை' எனும் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

ஆசிரியர் 'கலை' மணிமுடியைப் பற்றி....

கவிஞர், திறனாய்வாளர், பேச்சாளர், இயக்கச் செயல்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இலக்கிய வட்டத்தில் கலை மணிமுடி என நேசத்துடன் அழைக்கப்படுபவர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். 'உஷாராயிரு' எனும் கவிதைத் தொகுப்பு 1975-இலும் 'கடலோரம்' எனும் கவிதைத் தொகுப்பு 1985-லும் வெளிவந்தன. சிற்றிதழ்ச் சூழலில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

அவரிடம் ஒரு கேள்வி:
கலையின் தொடர் பயணம் குறித்துச் சொல்லுங்கள்?

"தி.க.சி. குறிப்பிடும் சூழலியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம், மார்க்சியம் எனும் பஞ்சசீலக் கொள்கையை மையமாக வைத்து கலை இதழ் பயணித்துக் கொண்டிருக்கிறது. கோட்பாடு சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கிணைப்பதும் பரிசளித்து படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும் கலை இதழின் முக்கிய நோக்கமாகும்" என்கிறார் மணிமுடி.

தத்துவங்களின் விவாதங்களை அறிந்து கொள்ள பயனுள்ள இதழ், 'கலை'.

தனி இதழ் ரூ": 7

ஆண்டுச் சந்தா : ரூ 50

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

கலை
26, பாரதி குறுக்குத் தெரு
செல்லியம்மன் நகர்
அம்பத்தூர்,
சென்னை- 600 058.

செல்: 94440 33589

EmaiL: ambaiappa@yahoo.co.in

நன்றி : அந்திமழை