Friday, April 27, 2012

கொம்பு

சிற்றிதழ் அறிமுகம் - கொம்பு

காடு எரிகிறது,  அதன் அடி வயிற்றிலிருக்கும்  பூச்சிகளும், விலங்களும் எரிகின்றன. பூக்களும்,  கனிகளும் கருக பறவைகள் ஊமையாகி சிதறி பறக்கின்றன.  குண்டடிபட்ட ஒரு காட்டெருமை ஆகாயம் நோக்கி அலறுகிறது.  வலி நரம்பில் உதிரம் கசிய கனவில் வீழ்கிறது அதன் திறந்த விழி........

என ஆரம்பிக்கும் ஆசிரியரின் கோபத்திற்கு ஏற்ற கட்டுரைகளும், கவிதைகளும் நூல் முழுக்க விரவி கிடக்கின்றன.  குறிப்பாக கணேசகுமாரனின், 'கொம்பன்' சிறுகதைகளை கூறலாம்.  மன்னர் காலத்தில் தொடங்கி நவீன காலம் வரை யானைகள் மனிதர்களிடம் சிக்கி படும் துன்பங்களை விவரித்துள்ளார். நமது காடுகளில் பல்லாயிரக்கணக்கில் சுற்றித் திரிந்த யானைகள், இன்று சில ஆயிரங்களாக குறைந்திருப்பதற்கு மனிதனே முக்கிய காரணம் என்பதை தனது கதைகள் மூலம் நிருபிக்கிறார். பசுமை இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக 'கொம்பன்'  சிறுகதைகளை தந்திருக்கிறார்.

நக்கீரன், ந.பெரியசாமி, சபரிநாதன், உள்ளிட்ட பலரின் கவிதைகள் நூலுக்கு பலம் சேர்க்கிறது. ச.முருகபூபதியின் தாம்போய் கதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன.  பழங்குடி வாழ்வை தேடி அலையும் காந்திராஜனின் நேர்காணல் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனமயமான இறை உருவங்கள் நமது தமிழ்நாட்டு குகை ஒவியங்களில் இல்லை என்றும், தமிழ் கடவுள் என்று கூறப்படும் முருகன் உருவம் கூட குகை ஒவியங்களில் இல்லை என்பதும் ஆய்விற்குரியது.

நக்கீரனின், 'மழைக்காடுகளில் திரியும் மருந்து கொள்ளையர்கள்' கட்டுரை நமது வளமிக்க மழைக் காடுகளில் பன்னாட்டு பெருங் குழுமங்களும், உள் நாட்டு பெரு முதலாளிகளும் நடத்தும் கொள்ளைகளை விரிவாக எடுத்துரைக்கிறது.  காடுகளையும், காட்டுயிர்களையும் கணக்கின்றி அழிப்பது தொடர்ந்தால், காட்டுயிர்களையும், எழிலார்ந்த மலைகள், காடுகள், ஆறு, ஏரி, போன்றவற்றை அனுபவிக்கும் கடைசி தலைமுறையாக நாம் தான் இருப்போம் என்பது உறுதி.

அந்த வகையில், சமூக அவலங்களை பேச,எதிர்க்க வந்துள்ள தரமான சிற்றிதழ் எனலாம். அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

'கொம்பின் கூர்மை இசைப்பதற்கு மட்டுல்ல'- என்ற வரிகள் உண்மை என்று நூல் வாசிப்பு உறுதிபடுத்துகிறது.


ஆசிரியர்;
வெய்யில்

தொடர்புக்கு;
எண்.11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்  -  611 001.
அலைபேசி; 9952326742.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/731-introductiontokombu

மாணவன்

மாணவன் - சிற்றிதழ் அறிமுகம்


தமிழர் நலனை முன்னிறுத்தி மாணவர்களால் மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது 'மாணவன்' எனும் அழகிய சிற்றிதழ். மாணவர்களே சமூகத்தின் வருங்கால தூண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கட்டுரைகள் யாவும் தமிழகத்தின் அவல நிலையை மக்களுக்கு உரத்து சொல்வதாக அமைந்துள்ளது.

தமிழரின் தேசிய பொருளாதாரம், வணிகம் - மார்வாடி, தெலுங்கர், மலையாளிகளால் தொடர்ந்து சூறையாடப்படுவதை சு.சா.இரா-வின் 'தமிழரின் வணிகம் தழைக்கட்டும்' கட்டுரை விவரிக்கிறது. நமக்கான தலைவர்கள் இல்லாமல் உலக வங்கிக்காகவும், அமெரிக்க நலன்களுக்காகவும் சேவை புரிகிற தலைவர்களே நமக்கு வாய்த்திருப்பது பெரும் கேடு. தமிழகத்தில் தமிழனுக்கான தலைவர்கள் இல்லாமல் இருப்பதையும், நமக்கான தலைமை, அரசியல் சக்தி தேவை என்பதை இன்றைய அரசியல் களம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

எந்தவொரு தன்னெழுச்சியான மக்கள் போராட்டமும் தத்துவார்த்த போராட்டமாக, சரியான தலைமையோடு இணைக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெற இயலும். முத்துக்குமார் இறப்பின் போதும், முல்லைப் பெரியாறு சிக்கலின் போதும் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் எழுச்சி, சரியான தத்துவார்த்த வழிகாட்டல் இல்லாமல், தலைமை இல்லாமல் அடங்கி போனது வரலாற்று சாட்சியாய் நம்முன் நிற்கிறது. இனியும் இந்த தவறு நேராவண்ணம் போராட்டத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக அணிவகுப்போம் என்பதை முடிகொண்டானின் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது.

'கால ஆய்வில் கயமை உடைபடும் காலம்' - என்ற த.ரெ.தமிழ்மணியின் கட்டுரை தமிழரின் வரலாற்றை ஆதாரத்துடன், ஆணித்தரமாக நிறுவுகிறார். நூலில் இடம் பெற்றுள்ள சிறுசிறு பெட்டிச் செய்திகளும், கவிதைகளும் ஆவேசத்துடன், கோபக்கனல் தெரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தமிழன் இழந்த வரலாற்றை புரிந்து கொள்ளவும், மீட்டெடுக்கவும் 'மாணவன்' என்ற இச்சிறு சிற்றிதழ் போராட்ட களத்தில் களமாடுகிறது என்றால் அது மிகையல்ல. தமிழன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரும் 'மாணவன்' - சிற்றிதழை படிப்பதுடன், அதனுடைய கருத்தை பரப்பும் பரப்புரையாளனாக மாறுவது காலத்தின் அவசியம்.

மாணவன் - மாணவர்களால்... மக்களுக்கு வழிகாட்டப்படுகிறது...



ஆசிரியர் குழு  -  ச.தமிழ்வேந்தன்,  பே.ர.பிரபாகரன்.

தொடர்புக்கு  -  இரா.க.பிரகாசு
78, அழகிரி நகர், திருவாரூர் - 610 001.
பேசி         -  98659 72207

தனி இதழ்    -  ரூ.5.00 மட்டும்.

ஆண்டு கட்டணம்  -  ரூ.60.00 மட்டும்.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/764-manavanshortmagazine

தமிழர் நாடு

தமிழர் நாடு - சிற்றிதழ் அறிமுகம்

இனம்மொழிநா டெம்முரிமை யாம்வெல்லு மட்டும்
தணியாதெம் நெஞ்சின் தழல்
-ம.லெ.தங்கப்பா


என்ற அனல் தெறிக்கும் வரிகளுடன், தமிழர் என்ற இனம் காக்கப்படாமல் மொழியை  காக்க இயலாது என்கிற தலையங்கத்தோடு, இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலையை வருத்ததுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

கூடங்குளம் இன்று சர்வதேச பார்வையை எட்டியுள்ளது என்றால் இடிந்தகரை மக்களின் அறவழியிலான, கட்டுகோப்பான போராட்டமே. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ் சமூகத்தில் ஆகப் பெரிய இயக்கங்கள் சாதிக்கவியலாத கட்டமைப்பை, ஒழுங்கமைவை சாத்தியப்படுத்தியவர் உதயகுமார் என்ற ஒற்றை மனிதர். அவருக்கு பின்னால் தமிழகம் அணி திரள வேண்டியது, ஆனால் நமது துரதிஷ்டம் இடிந்தகரை மக்கள் மட்டுமே போராடுவது போன்ற ஒரு மாயை அரசும் திட்டமிட்டு உருவாக்கிவிட்டது. அதற்கு விழிப்புணர்வற்ற மக்களும் இரையாகியுள்ளனர் என்பது தான் வேதனை. எட்டு மணி நேர மின்வெட்டை திட்டமிட்டே அரசு உருவாக்கி ஒரு பகுதி மக்களை அணுஉலைக்கு ஆதரவாக பேச வைத்துள்ளது இன்றைய ஆளும் வர்க்கம். இந்த மோசடியான மக்களை ஏமாற்றும் வேலையை அரசு தொடர்ந்து செய்ய இயலாது என்பதே வரலாற்று உண்மை. ஏமாறுகிற மக்கள் ஒரு நாள் கேள்வி கேட்கிற காலம் வரும், அது அரசுகள் வீழ்கின்ற காலமாக அமையும். கல்பனா சதீசு எழுதியுள்ள 'கூடங்குளம் அணுஉலை வெளிக் கொண்டு வரும் உண்மைகள்' கட்டுரை இடிந்தகரை மக்களின் உண்மை நிலையை நம்முன் நிறுத்துகிறது.

தமிழகத்திற்கு முழு உரிமையுள்ள காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்று நீர் சிக்கல்களில் நமக்கு எதிராக துரோகமிழைத்துக் கொண்டு இருக்கும் திராவிட(?) மாநிலங்களுக்கு, நெய்வேலியில் இருந்து தினம் தோறும் மின்சாரம் அனுப்பபடுகிறதே? இதை யார் கேட்பது? யார் தடுப்பது? இந்த கேள்விகளை முன்வைத்து 'பறிபோகும் நெய்வேலி மின்சாரம்' கட்டுரையில் கா.தமிழ்வேங்கை வெளிப்படுத்துகிறார். முல்லை பெரியாறு அணையை உடைக்க காத்திருக்கும் மலையாளிகள், நமது நெய்வேலி அனல் மின் நிலையத்தில் சுமார் 5,000 த்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர் (மலையாளிகளையும் சேர்த்து 8,000-த்திற்கும் அதிகமான வெளி மாநிலத்தவர் பணியில் உள்ளனர்.) என்ற செய்தி அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

மாற்று அரசியலை உருவாக்குங்கள் என்ற தமிழருவி மணியனின் ஆசை நிறைவேற தமிழகத்தில் இன்னும் காலம் கனியவில்லை என்றே தோன்றுகிறது. பேரா.ம.லெ.தங்கப்பா அவர்களின் நேர்காணல், இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டியது. தற்கால தமிழனின் நிலையை தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் தனக்கென ஒரு நாடு தேவை என்பதை உணர வேண்டும் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தது சிறப்பாகவே இருந்தது.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் (ஏ.டி.எம்.) சேவையும், மோசடியும் என்ற கட்டுரை இதுவரை நமக்கு தெரியாத ஒரு முக்கிய செய்தியை உணர்த்தியுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் மின்சார பொய்களை ப.நற்றமிழனின் கட்டுரை விளக்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள மற்ற கட்டுரைகளும், பெட்டி செய்திகளும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.

தமிழர் நாடு தரணியெங்கும் செல்ல வேண்டும். தமிழர் நலம் பேண வேண்டும்.


ஆசிரியர்; முருகு.இராசாங்கம்

தொடர்புக்கு; எசு-9, மருத்துவர்கள் குடியிருப்பு,
பூ.சா.கோ. மருத்துவமனை வளாகம்,
பீளமேடு, கோயம்புத்தூர் - 641 004.
மின்னஞ்சல்; thamizharnadu@yahoo.com

நன்கொடை; ரூ.10.00 மட்டும்.

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/777-2012-03-26-09-19-51

மின்மினி

சிற்றிதழ் அறிமுகம் - மின்மினி

மின்மினி
(ஹைக்கூவும் ஹைக்கூவைச் சார்ந்தும்)

தமிழ்ச் சூழலில் கவிதைகளுக்காக ஒரு இதழ் வருகிறது என்றால் அது மிகவும் பாராட்டிற்குரிய செயலே. கன்னிக் கோவில் இராஜா அவர்களை ஆசிரியராக கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மின்மினி' என்ற இருமாத இதழ் வருவது மகிழ்ச்சிக்குரிய விசயமே.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஹைக்கூ கவிதை போட்டிகள், புதுமுக கவிஞர்களின் கவிதைகள், வசீகரனின் கவிதை குறித்த கட்டுரை, புதுவைத் தமிழ்நெஞ்சனின் துளிப்பா இலக்கணம் என நூல் முழுக்க கவிதைகள் குறித்து  செய்திகள் விரவி கிடக்கின்றன. கவிதை நூல்கள் பற்றிய நூல் அறிமுக பகுதியும் 'படித்துப் பயனுற' பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நூலில் இடம் பெற்றுள்ள சில கவிதைகள்...

பாரமான லாரி
இறந்து போனது
ஆறு.

உறவுகளோடு
சேரவிடாமல் தடை
அழும் நதி.

என்ற ஆதம்பாக்கம் கோவிந்தனின் கனமான வரிகள் மனதை கவர்கின்றன.

ஒடாத கடிகாரம்
சோதிடர் வாக்கு
நேரம் சரியில்லை.

என்ற உதயக்குமாரன் கவிதையும்,

உயிர் கொடுத்து பாடினான்
வெட்டியான்
சடலம் முன்.

என்ற மகளிர் மட்டும் பகுதியில் இடம் பெற்றுள்ள ஈரோட்டை சேர்ந்த வளர்மதி கவிதையும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நூலில் இடம் பெற்றுள்ள பெட்டிச் செய்திகளும் சிறப்பாகவே உள்ளன. கவிதையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மேடையாக, தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக 'மின்மினி' இதழ் உள்ளது.

கவிதையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு 'மின்மினி' இதழ் ஒரு சரியான தளம் அமைத்துக் கொடுக்கிறது என்றே கூறலம்.


மின்மினி - இருமாத ஹைக்கூ இதழ்

ஆசிரியர் - கன்னிக்கோவில் இராஜா

தொடர்புக்கு - ஆசிரியர்,
மின்மினி ஹைக்கூ இதழ்,
30-8, கன்னிக்கோவில் முதல் தெரு,
அபிராம்புரம்,
சென்னை - 600 018.
தமிழ்நாடு.
இந்தியா.

மின்னஞ்சல் - minminihaiku@gmail.com
kannikovilraja@gmail.com

விலை - தனி இதழ் ரூ.5.00
2 ஆண்டு சந்தா ரூ.60.00
5 ஆண்டு சந்தா ரூ.150.00
புரவலர் நன்கொடை ரூ.1000.00

நன்றி:  http://www.thadagam.com/index.php/books/bookscategories/shortmagazines/786-minmini

Wednesday, January 14, 2009

கவிதாசரண்

நவீனத் தமிழிலக்கிய விவாதப் பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் இதழ் 'கவிதாசரண்'.

கவிதாசரண் என்கிற தனிமனிதனின் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பல தலித்திய இதழ்களுக்கு முன்னோடி இதழ் இது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கவிதாசரண் முதலிதழ் முகிந்தது.

'தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்' எனும் முனைப்புடன் கதை, கவிதை, கட்டுரை என முழுக்க இலக்கியம் சார்ந்து மட்டுமே ஓராண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது.

முதல் இதழ் தொடங்கப்பட்டபோது 44 பக்கங்களில் வெளிவந்தது. தனி இதழ் 3 ரூபாயும், ஆண்டு சந்தா 36 ரூபாயுமாகவும் இருந்தது. 3 ஆவது ஆண்டிலிருந்து படிப்படியாக 60 பக்கம், 80 பக்கம் எனப் பக்கங்கள் கூடிக் கொண்டே சென்றது. சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த இதழ் (A8 size) 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து (46 ஆவது இதழிலிருந்து) பெரிய அளவில் (A4 size) இரு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது.

1992ஆம் ஆண்டு நடந்த பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் இலக்கியத்துடன் சமூகவியல் சார்ந்த பிரச்சனைகளையும் மையப்படுத்தி வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து இலக்கிய வெளியில் தலித்தியம், பெரியாரியம் சார்ந்து இயக்கங்கொள்ள தொடங்கி இன்றுவரை அந்நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் வந்து கொண்டிருக்கிறது.

"தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்" என்கிறார் ஆசிரியர் கவிதாசரண்.

மரபுகளையும், நீதிகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது கவிதாசரண்.

அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, தொ. பரமசிவம், நா. மகம்மது, ஸ்டாலின் ராஜாங்கம், பாரி செழியன், சுகுணா திவாகர், வளர்மதி போன்றோர் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

விவாதத்திற்குரிய கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. பெ.சு. மணி, தி.க.சி. போன்றவர்கள் தொடர்ந்து விரிவான கடிதங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பிதழை வெளியிட்டு வருகிறது கவிதா சரண்.

விமர்சன ரீதியில் சிலருக்கு அதிர்ச்சியையும் திடுக்கிடுதலையும் கொடுத்த இதழ் கவிதா சரண். இத்தகைய அதிர்ச்சியும் திடுக்கிடுதலும் இன்றும் தொடர்கிறது. எந்த விஷயத்தையும் ஆழமாக விவாதிப்பது, எந்த தனிப்பட்ட மனிதனையும் தாக்காமல் கருத்தியலின் பிரதிநிதியாக விமர்சிப்பது கவிதாசரணின் போக்காக அமைகிறது.

சுந்தர ராமசாமியின் படைப்பை முதன் முதலில் விமர்சித்து வந்த 'ராமசாமியின் சொந்த முகம்' எனும் கட்டுரையும் தலித்தியம், பிராமணியம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் குறிப்பிடத்தக்கன.

சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இவ்விவாதங்களில் கலந்து கொண்டனர்.

"தயவு தாட்சண்யமின்றி அணுகுவதால் நண்பர்கள் கூட முரண்பட்டு பிரிந்திருக்கிறார்கள். சுய விளம்பரத்திற்காக எதையும் செய்வதில்லை" என்கிறார் கவிதாசரண்.

இதழ் தயாரிப்பதில் ஒளியச்சு தொடங்கி விற்பனை வரை கவிதாசரணும் அவரது துணைவியாரும் மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆசிரியர் கவிதாசரணைப் பற்றி:

கவிதாசரண், கணித ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஒரே மகனையும் மூளைக் காய்ச்சல் நோயால் 1980இல் பறிகொடுத்தவர். ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு கவிதாசரணை ஆரம்பித்தார். 'கவிதாமணி' என்கிற பெயரில் 1957லிருந்து 1972 வரை 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நான்கு நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 இலக்கியத் திறனாய்வு நூல்கள், 1 கவிதைத் தொகுப்பு என 12 நூல்களை 'பிறைமுடி' எனும் தமது சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.

'கவிதாமணி' என்பது பட்டப் பெயரைப் போல் இருப்பதால் கவிதாசரண் என்கிற பெயரில் எழுத ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.

1970களில் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் (ஜேக்டி) சென்னை மாநகரத் தலைவராக இருந்திருக்கிறார். அக்கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புப் பெற்றவர்.

தற்போது 70 வயது ஆனாலும் ஓர் இளைஞனுக்குரிய உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

"பொருளாதார ரீதியாக இதழ் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான உடல் உழைப்பிலும் என் துணைவியார் பங்கு முக்கியமானது. இவர் தான் எனக்கு பக்கபலமாக, உந்துசக்தியாக இருக்கிறார். அதனால்தான் என்னால் இந்த வயது வரை பொருளாதார சிக்கல் இருந்தாலும் பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிகிறது" என்கிறார் நெகிழ்ச்சியுடன் கவிதாசரண்.

அவருடன் சிறு நேர்காணல்:

கவிதாசரண் இதழை நடத்துவதற்காக நோக்கம் என்ன?

"சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில் கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.

வேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்".

இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

"கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.

நான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.

காலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன். சில அரசியல் பெரும் புள்ளிகளும், பத்திரிகையாளர்களும் கவிதாசரணை தொடர்ந்து படித்துவருகின்றனர்.

இலக்கிய வாசகர்களின் ஆதரவும் இருக்கிறது. சிறு பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாகும் இதழ் கவிதாசரண்.

சந்தா விவரம்:

தனி இதழ் : ரூ20/-
10 இதழ்கள்: ரூ200/-
25 இதழ்கள் : 500/-
50 இதழ்கள்: ரூ1,000/-
வெளிநாடுகளுக்கு:
தனி இதழ் 2 டாலர்

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

கவிதாசரண்
31 டி.கே.எம். நகர்,
சென்னை- 600 019.
தொலைபேசி: 044- 2574 01 99
மின்னஞ்சல்:kavithasran@yahoo.காம்

நன்றி : அந்திமழை

கூட்டாஞ்சோறு

" இயக்கத்தின் நுட்பமும்
இயங்குவதன் விசையும் உழைப்பின்
விரல்களில்தான்.
வடிக்கும் ஆற்றலை
இயக்கும் ஆளுமையை
கூத்தாய் கொண்டாட்டமாய்
பாட்டாய் இசையாய் இலக்கிய வடிவாய்
படைப்போம்.
மக்களுடன்...
மக்களிடமிருந்து...
மக்களுக்காக...
எழுத்தாய் இயக்கமாய் எழுவோம்"

மக்களுக்கான கலை இலக்கியத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'கூட்டாஞ்சோறு' காலாண்டிதழின் (ஜுலை-செப்.2005) தலையங்கம் இது.

முதல் இதழ் 2004 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. முதல் பிரதியை 'மணிக்கொடி' மூத்த எழுத்தாளர் சிட்டி வெளியிட இளைய தலைமுறை எழுத்தாள÷ கவிஞர் ஆசு பெற்றுக்கொண்டார். மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் நோக்குடன் இவ்வாறு நிகழ்ச்சியை வடிவமைத்ததாகக் குறிப்பிடுகிறார்,இதன் ஆசிரியர் மயிலை பாலு.

இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் குழு: கே.பி. பாலச்சந்தர், சூரியசந்திரன். இரா. குமரகுருபரன், சிவசெந்தில்நாதன், தா. மணிமேகலை.

"தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தென் சென்னை மாவட்டக் குழுவின் முயற்சியில் இவ்விதழ் வெளிவந்தாலும் இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இதழ் அல்ல. தமிழ்நாடு முழுக்க பொதுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது" என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு இதழிலும் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு மூத்த படைப்பாளியின் நேர்காணல், தமிழின் முக்கியமான ஓவியர்களின் அட்டைப் பட ஓவியம் முதலியன கூட்டாஞ்சோறின் சிறப்பம்சமாகும்.

கவிதைகளும், சிறுகதைகளும், புத்தக விமர்சனங்களும் வெளியிடப்படுகிண்றன. இருண்மையற்ற எளிமையான படைப்புகளையே வெளியிடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது கூட்டாஞ்சோறு.

முதல் இதழில் அம்பேத்¸¡ர் பற்றிய சிறப்புக் கட்டுரை, இரண்டாம் இதழில் விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரை வெளியானது.

தொடர்ந்து பெரியாரின் 125ஆம் ஆண்டை முன்னிட்டு பெரியாரின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து ஒரு கட்டுரை (அக்-டிசம்பர் 2004) இதழில் வெளியானது. பரவலாக பேசப்பட்ட கட்டுரை இது,

மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல் நூற்றாண்டையொட்டி 'தாய்' நாவல் குறித்தும் அது தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவான கட்டுரை(ஏப்-ஜூன் 2005) இதழில் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் குறித்த கட்டுரை வெளியானது. அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் அரவாணிகளைப் பற்றியும் அவர்களது கூத்தாண்டவர் கோயில் திருவிழா பற்றியும் விரிவானதொரு கட்டுரை இதே இதழில் வெளியானது.

நவீன தமிழ் இலக்கியச் சூழலில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதும் கூட்டாஞ்சோறின் உள்ளீடுகளில் ஒன்றாகும். அவ்வகையில் பெண்மொழி பற்றிய ஒரு கலந்துரையாடலை கூட்டாஞ்சோறு நிகழ்த்தியது.

பத்மாவதி விவேகானந்தன், பா. ¦ƒயப்பிரகாசம், லீனா மணிமேகலை, அரங்க மல்லிகா, அ. வெண்ணிலா, த. மணிமேகலை, மயிலை பாலு உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நேர்காணல்களை கூட்டாஞ்சோறு வெளியிட்டு வருகிறது.

வல்லிக்கண்ணன், இன்குலாப், சிற்பி, ஆ.சிவசுப்பிரமணியன், அ. மார்க்ஸ், ஈரோடு தமிழன்பன், தொ. பரமசிவம், ஆஷாபாரதி ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

முக்கியமான நவீன ஓவியர்களின் ஓவியங்களை அட்டைப்படமாகத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறு.

இதுவரை ஆதிமூலம், விஸ்வம், புகழேந்தி, நெடுஞ்செழியன், வின்சி ஆகியோரின் ஓவியங்கள் அட்டையை அலங்கரித்து வந்திருக்கின்றன. கூட்டாஞ்சோறு சார்பில் கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் மயிலை பாலு பற்றி:

பத்திரிகையாளராகப் பணியாற்றும் மயிலை பாலு ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்.

'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்', 'நள்ளிரவில் சுதந்திரம்' (வி.என். ராகவனுடன் இணைந்து, 'வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்', 'சூறாவளி' (சீன நாவல்) ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நள்ளிரவு சுதந்திரம் நூலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றிருக்கிறார்.

இனி அவருடன் சில விநாடிகள்....

கூட்டாஞ்சோறின் நோக்கம் என்ன?

"இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது, முற்போக்குச் சிந்தனையுள்ள மூத்த எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இடையே சிந்தனை இணைப்பை உருவாக்குவது, சிறு சிறு கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்திருக்கும் ஒரே சிந்தனை உடையவ÷¸ளை ஒருங்கிணைப்பது, புதிய படைப்பாளர்களிடம் மாற்றுச் சிந்தனையை முன் வைத்து எழுதத் தூண்டுவது, எதார்த்தவாதத்தை நோக்கி இளம் படைப்பாளர்களைத் திருப்புவது ஆகியவை கூட்டாஞ்சோறின் முக்கிய நோக்கங்களாகும்".

கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டதற்கு ஏதேனும் காரணம் இருக்கின்றதா?

"ஆசிரியர் குழு, நிர்வாகக் குழு என இதழுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லோரது அனுபவமும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு ஆகிறது. அத்துடன் கூட்டு முயற்சி தேவை என்பதாலும், அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதாலும் கூட்டாஞ்சோறு என்று பெயரிட்டோம்" என்கிறார், ஆசிரியர் மயிலை பாலு.

கூட்டாஞ்சோறு- இளம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல விருந்தாக வந்து கொண்டிருக்கிறது.

தனி இதழ் ரூ 10/
ஆண்டு சந்தா ரூ 40/

படைப்புகள் மற்றும் சந்தா அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
'கூட்டாஞ்சோறு',
3; சி பிளாக், வள்ளீஸ்வரன் தோட்டம்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை- 600 028.
செல்பேசி: 9444 4140344/ 9444 271479

நன்றி : அந்திமழை

முகம்

தமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளிவருகிறது 'முகம்'.

தமிழ் அறிஞர்களின், சாதனையாளர்களின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவரும் இதழ் 'முகம்'. இதன் ஆசிரியர் மாமணி. முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. ஒரு மாதம் கூடத் தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்துள்ளன ( ஆகஸ்டு 05 வரை). ஆரம்ப ஓராண்டுகால அட்டையை பாரதியார், புதுமைப்பித்தன், என மறைந்த தமிழ் இலக்கிய அறிஞர்கள் அலங்கரித்தனர். பிறகு நெல்சன் மண்டேலா, நேரு, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது படங்கள் முகத்தின் அட்டையை அலங்கரித்தது. இப்படி 236 பேருடைய புகைப்படம் அட்டைப்படத்தில் வெளிவந்துள்ளது. அவர்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளும், சிறுகதைகளும் உண்டு.

என்.எஸ்.கிருஷ்ணணின் கிந்தனார் காலாட்சேபத்தால் ஈர்க்கப்பட்டு மாமணியும் 'கிந்தனார் பதில்கள்" எனும் கேள்வி - பதில் பகுதியை முகத்தில் எழுதத் தொடங்கினார். எள்ளல் தொனியுடன் எழுதப்படும் இக்கேள்வி பதில்கள் 'முகம்" வாசகர்களிடம் தனிச் சிறப்பு பெற்றவை.
எடுத்துக்காட்டாக இரண்டு கேள்வி - பதில்கள்

கே: கணவன் முன்னால் செல்ல, மனைவி பின்னால் செல்வது நல்லதா? மனைவி முன்னால் செல்ல கணவன் பின்னால் செல்வது நல்லதா?

ப: பின்னால் வரும் மனைவி மேல் நம்பிக்கை உள்ள கணவன், முன்னால் செல்லலாம். பின்னால் வரும் கணவன் மேல் நம்பிக்கை உள்ள மனைவி முன்னால் செல்லலாம். சாலைப்போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருவரும் இணைந்து செல்வது எல்லாவற்றிலுமே நல்லதுங்க.

கே: நீதியை மதிப்பவர்கள் யார்?

ப: நிதியை மதிக்காதவர்கள்.

இப்படி எள்ளலும் குத்தலுமான பதில்கள் மூலம் சிந்தனையைத் தூண்டுபவர் மாமணி. இந்தப் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறேன். பிறகு முப்பது நாள்களில் நேரங்கிடைக்கும்போதெல்லாம் மெருகேற்றுகிறேன் ' என்கிறார் மாமணி. கேள்வி பதில்களை தொகுத்து 'கிந்தனார் பதில்கள்", கிந்தனார் சிந்தைனைகள்" என இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 200 பேரைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளை மூன்று புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறார். எழுத்தாளர்களையும் சாதனையாளர்களையும் வாழும்போதே கவுரவிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் அவர்களுக்கு அவ்வப்போது பாராட்டு விழாவையும் நடத்துகிறார் மாமணி. ஆய்வாளார் ஆ.இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகத்தினுடைய உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பெ.கி. பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் முகம் மூலம் அறியப்பட்டவர்கள்.

இதழில் தற்போதைய சிறப்பாசிரியராக முனைவர் இளமாறன் செயல்படுகிறார்.
முகமாமணி ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) யில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 'உண்மையின் சிறகுகள்'(கவிதை), 'தாயே" (குறுங்காவியம்) பன்மொழிப்புலவர் அப்பாத்துரை, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன், ஜீவாநாரண துரைக்கண்ணன் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும், 'யாருக்காக சுமந்தார்', மாமணியின் சிறுகதைகள் 60 ' எனும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் ' மண்டோதரியின் மைந்தன்' எனும் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் கொள்கை பிடிப்புள்ளவர். சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். இது போன்ற பத்திரிக்கைகளை தேடிப் படிப்பது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பெற உதவக் கூடும்.

ஆண்டு சந்தா : ரூ. 60
தனி இதழ்: ரூ. 5
பக்கங்கள்: 32
பத்தாண்டுக் கட்டணம்: ரூ. 500
புரவலர் நன்கொடை: ரூ.1000

தொடர்பு முகவரி:
முகம்
10, 68 ஆம் தெரு,
11-ஆம் பிரிவு,
கலைஞர் நகர்,
சென்னை - 600 078.
தொலைபேசி: 044 - 24802684; 044- 24897995

நன்றி : அந்திமழை